ரெயில் கட்டணம் உயர்வு, இன்று நள்ளிரவு முதல்
1 min read
Train fare hike, effective from midnight today
30.6.2025
இந்தியாவில் குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் மேற்கொள்ள இருக்கும் பொதுப் போக்குவரத்து என்பது ரயில்வே. அதுமட்டுமின்றி, படுக்கை வசதி, ஏசி வசதி என பயணிகள் தங்கள் பயணத்தை மிகவும் வசதியாக மேற்கொள்ள உதவுவதும் ரயில் பயணம் தான்.
சமீபத்தில் இந்திய ரயில்வேயில் தட்கல் டிக்கெட் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்காமல், ஏஜெண்டுகள் உள்ளே நுழைந்து டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கும் சூழல் இருந்தது.
அதேபோல் சமீபத்தில், ரயில் கட்டணம் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி, ஏசி அல்லாத ரயில்களுக்கும், விரைவு ரயில்களுக்கும் கிலோமீட்டருக்கு ஒரு பைசாவும், ஏசி வசதி கொண்ட விரைவு ரயில்களுக்கு கிலோமீட்டருக்கு இரண்டு பைசாவும் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று ரயில்வே அதிகாரப்பூர்வமாக ரயில் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. மேலும், இது ஜூலை 1ஆம் தேதி அதாவது இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.
அதன்படி ஏசி இல்லாத விரைவு ரயில், மெயில் ரயில் மற்றும் ஏசி வசதி கொண்ட ரயில் கட்டணம் அரை பைசா முதல் இரண்டு பைசா வரை உயர்த்தி ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதில், ஏசி வசதி அல்லாத விரைவு மற்றும் மெயில் ரயில்களில் 500 கி.மீ. வரை எந்த கட்டண உயர்வும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 501 – 1500 கி.மீ வரை தூரத்திற்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 1501 – 2,500 கி.மீ. வரையிலான தூரத்திற்கு ரூ. 10 உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 2,501 – 3,000 கி.மீ. வரையிலான தூரத்திற்கு ரூ. 15 உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேபோல், ஏசி பெட்டிகளுக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா அதிகரித்து ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், மூன்றாம் வகுப்பில் இருந்து முதல் வகுப்பு வரையிலான அனைத்து ஏசி பெட்டிகளுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவிரைவு ரயில்களான தேஜஸ், சதாப்தி, ராஜ்தானி, வந்தேபாரத் உள்ளிட்ட ரயில்களுக்கான கட்டண உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.