நினைவு இல்லமாக மாறும் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு; நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு
1 min read
Jayalalithaa Boesgarten house which becomes a memorial house; Government’s decision to acquire land
6-5-2020
ஜெயலலிதாவின் வீட்டை அரசு நினைவிடமாக மாற்றம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்துவது அவசியம் என்று அரசு முடிவு எடுத்துள்ளதாக சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நினைவு இல்லம்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டையும் நினைவு இல்லமாக மாற்ற அரசு தற்போது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
அவர் வசித்து வந்த போயஸ்கார்டனில் உள்ள ‘வேதா’ இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதற்கான நடவடிக்கைகளிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்தும் கேட்கப்பட்டது. வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடமாக மாற்றினால் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வார்கள் என்றும் அவர்கள் வாகனங்களை நிறுத்துவதால் அங்கு மீண்டும் நெருக்கடி ஏற்படும் என்றும் அப்பகுதி மக்கள் கூறினார்கள்.
ஆனால் பெரும்பாலானோர் ஜெயலலிதாவின் வீட்டை அரசு நினைவிடமாக மாற்றுவதை வரவேற்ற இருந்தனர். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
நிலம் கையகம்
இந்த நிலையில் ஜெயலலிதாவின் வீட்டை அரசு நினைவிடமாக மாற்றம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்துவது அவசியம் என்று அரசு முடிவு எடுத்துள்ளதாக சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டை கையகப்படுத்துவதால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் எதுவும் இல்லை. எனவே அவர்களை அப்புறபடுத்தவோ மறு குடியமர்த்துவதோ மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ எந்த அவசியமும் ஏற்படவில்லை. எனவே மறு குடியமர்வுக்கும் மறுவாழ்வுக்குமான மாற்று இடம் ஏதும் கண்டறியப்படவில்லை.
இந்த நில எடுப்பு நிலங்களின் வரைபடங்கள் (பிளான்) கிண்டியில் உள்ள தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் மக்கள் பார்வையிடலாம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் 3 அடுக்கு வீட்டில் பலா மரம்-1, மா மரம் -2, தென்னை-5, வாழை மரங்கள்-5 உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.