காஷ்மீரைச் சேர்ந்த 3 போட்டோகிராபர்களுக்கு புலிட்சர் விருது
1 min read
விருதுக்குரிய புகைப்படம்
6.5.2020
பத்திரிகைத்துறையில் மிகுந்த மதிப்பு மிக்கது புலிட்சர் விருது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட வேண்டிய இந்த விருது, உலகை உலுக்கி வரும் கொரோனா பெருந்தொற்றால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த மூன்று ஒளிப்பட கலைஞர்களுக்கு (போட்டோகிராபர்கள்) புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் தர் யாசின், முக்தர் கான், சான்னி ஆனந்த் ஆகிய இவர்களுக்குத்தான் அந்த விருது கிடைத்துள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 வது பிரிவு மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புத்தகுதியை நடுவண் அரசு பறித்த பிறகு, அங்குள்ள மக்களின் வாழ்க்கையை இவர்களின் கேமரா கண்கள் பதிவு செய்த படங்கள்தான் இந்த விருதை தட்டிச் சென்றுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறப்புத்தகுதி பறிக்கப்பட்டவுடன், செல்போன் மற்றும் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டு, முழு ஊரடங்கால் வெளியுலகத் தொடர்பற்றுப் போன காஷ்மீரின் அன்றாட வாழ்க்கை – மக்கள் போராட்டங்கள், காவல்துறை, துணை ராணுவப்படையின் நடவடிக்கைகள் இவர்களின் படங்களில் பதிவாகியுள்ளன.

ஒளிப்படக் கலைஞர்களுக்கும் ஒளிப்பட பத்திரிகையாளர்களுக்கும் (Photo Journalists) இடையே பெரும் வேறுபாடு உள்ளது. ஒளிப்பட பத்திரிகையாளனின் கேமரா மக்களின் வாழ்க்கையை படம்பிடிக்கிறது. அவர்களின் படங்கள்தான் செய்தி, படங்கள் தான் வாழ்க்கை, படங்கள்தான் கட்டுரை…
“புலிட்சர் விருது கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வியப்பாக இருக்கிறது” என்கிறார் ஒளிப்பட பத்திரிகையாளர் சான்னி ஆனந்த். ஆனால், “பத்திரிகையாளர்கள் மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்தியை, சிறப்பாகக் கொடுத்திருப்பதை விருது உறுதி செய்திருக்கிறது” என்கிறது அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம். உண்மைதானே.
வாழ்த்துகள் பத்திரிகையாளர்களே..