கொரோனா படுத்தும் பாடு: கைதியால் போலீஸ் நிலையம் இழுத்து மூடப்பட்டது
1 min read
Corona to Prisoner of Inquiry; Thirunallar police station closed
11-5-2020
திருநள்ளாறில் விசாரணை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் போலீஸ் நிலையத்தையே இழுத்து மூடும் நிலை ஏற்பட்டு உள்ளது.
புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறு அருகே சுரக்குடியே வாகன டிரைவர் ஒருவர், தகராறு வழக்கு ஒன்றில் திருநள்ளாறு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை சிறைக்கு கொண்டு செல்லும் முன் அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் வசித்த சுரக்குடி கிராமம் முழுவதும் சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த டிரைவர் விசாரணைக்காக திருநள்ளாறு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதால் அந்த போலீஸ் நிலையமும் இழுத்து மூடப்பட்டது.
மேலும் அந்த போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
போலீஸ் நிலையம் மூடப்பட்டதால் திருநள்ளாறு கோவில் அருகில் உள்ள புறகாவல் நிலையத்தில் போலீஸ் நிலையம் இயங்குகிறது.
போலீசாருக்கு பரிசோதனை
திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் பணி புரிந்து வரும் போலீசார் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.