நாசரேத் இரட்டை கொலையில் போலீஸ்காரர் உள்பட 9பேர் கைது
1 min read
11.5.2020
நாசரேத் அருகே நடந்த இரட்டை கொலையில் சென்னை ஆயுதப்படை காவலர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள உடையார்குளம், காந்திநகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பலவேசம்(60). இவர், நாசரேத் வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த தங்க பாண்டி மகன் முத்துராஜிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.40 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். கடனை செலுத்திய பிறகும், அவர் பத்திரத்தை கொடுக்கவில்லை.
இதுகுறித்து பலவேசம், முத்துராஜின் தம்பி சண்முகசுந்தரத்திடம் தெரிவித்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பலவேசம் தாக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சண்முகசுந்தரத்தின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் 7 பேர் கடந்த 8ம்தேதி வீடு புகுந்து பலவேசத்தை சரமாரியாக வெட்டினர். இதைத் தடுத்த அவரது மருமகன் தங்கராஜ்(27)க்கும் வெட்டு விழுந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து உடல்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குபின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் நெல்லை சிந்துபூந்துறை மின்சார சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி எஸ்பி அருண்பாலகோபாலன் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன் ஆலோசனையின் பேரில் நாசரேத் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்ரீதர் தலைமை யில் எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சூரியன் மற்றும் போலீசார் அடங்கிய 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் நாசரேத் அருகே பதுங்கி இருந்த சகோதரர்களான செல்லத்துரை(49), பாரதி(45), முத்துராஜ்(40), முத்துகுமார்(34) மற்றும் உறவினர்களான அதேஊரைச் ேசர்ந்த சொக்கலிங்கம் மகன் ஞானசுந்தர்(34), அரியன் மகன் செந்தில்முருகன்(29), ஆசீர்வாதம் மகன் தாமஸ்(30) மற்றும் மறவர்குறிப்பன்குளத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன்கள் டேவிட்ராஜ்(38), பொன்ராஜ்(33)ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். இவர்களில் பொன்ராஜ், சென்னை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டை கொலை தொடர்பாக மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.