இந்தியாவில் மாதக் கணக்கில் ஊரடங்கை தொடர முடியாது; நிதின் கட்கரி பேட்டி
1 min read
Nitin Gadkari says, “India cannot continue for months on curfew”
14-5-2020
இந்தியா ஏழை நாடு என்பதால் ஊரடங்கை தொடர முடியாது என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார்
மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி தனியார் டெலிவிஷன் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
ஆய்வகத்தில் உருவான கொரோனா
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இனி நாம் அந்த வைரசுடன் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
இந்த வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல. ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்த வைரஸ், பல உலக நாடுகளை பாதித்துள்ளது. கொரோனா வைரசுக்காக தடுப்பு மருந்துகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைக்கு வைரசை தடுக்கும் மருந்து இல்லை. அது கிடைத்தால் மட்டுமே இந்த பிரச்சினையில் இருந்து நம்மால் முழுமையாக வெளியே வர முடியும். கொரோனா வைரசுக்கு விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.
அதற்கு அடுத்த பிரச்னை என்னவென்றால் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதுதான். சிலருக்கு அறிகுறியே இல்லாமல் தொற்று ஏற்படுகிறது. இதனால், தொற்றை கண்டறியும் எளிய வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு காரணம், இந்த வைரஸ் இயற்கை வைரஸ் அல்ல. ஆய்வகத்தில் இருந்து பரப்பப்பட்டது.
இதனை உலகமும், இந்தியாவும் எதிர்கொள்வதற்கு தயாராகிவிட்டார்கள். விஞ்ஞானிகளும் தயாராகிவிட்டனர்.
ஊரடங்கு
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், நாம் பொருளாதார பிரச்னையையும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்தியா ஏழை நாடு. நம்மால், மாதக்கணக்கில் ஊரடங்கை தொடர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.