ஊட்டி மலர் கண்காட்சி ரத்து
1 min read
124 ஆண்டுகளில் 2வது முறையாக
ஊட்டி மலர் கண்காட்சி ரத்து
15.5.2020
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்ககளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. 5 நாட்கள் நடத்தப்படும் இந்த மலர் கண்காட்சியை காண வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதன் மூலம் அரசுக்கும் வருவாய் கடைக்கும். அதேபோல், இங்குள்ள சிறு வியாபாரிகள் முதல் பெரும் முதலாளிகள் வரை லாபம் அடைவர்.
மலர் கண்காட்சிக்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் மூன்று கட்டமாக நாற்று நடவு பணிகளை மேற்கொண்டனர். பல வகைகளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் வண்ண வண்ண மலர்கள் தற்போது பூத்து குலுங்குகிறது. அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் லில்லியம், டேலியா, இன்கா மேரிகோல்டு, பிரஞ்ச் மேரிகோல்டு, பேன்சி, பெட்டூனியா, சால்வியா உட்பட பல வகையான மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
இந்த மலர் தொட்டிகள் அனைத்தும் பூங்காவில் உள்ள காட்சி மாடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரு மாதங்களாக பூங்கா மூடப்பட்டுள்ளது. இதனால், இந்த அழகை யாரும் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று 124வது மலர் கண்காட்சி துவங்கி 5 நாட்கள் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கு காரணமாக மலர் கண்காட்சி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த பல லட்சம் மலர்களையும், மலர் அலங்காரங்களையும் உலக மக்கள் காணும் வகையில் தோட்டக்கலைத்துறை தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நேரில் வந்து பார்க்க முடியாமல் ஏங்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கம் இந்த அழகை காணும் வகையில் ஒரு காணோலி (வீடியோ) தயாரித்து வருகிறது.
மேலும், புகைப்படங்களை கொண்ட ஆல்பமும் தயாரித்து வருகிறது. இதனை டிவிக்கள் மற்றும் பத்திரிக்கைகளின் மூலமாக பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுச் செல்லவுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில், ஓரிரு நாட்களில் இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்பட ஆல்பம் அரசு அனுமதியுடன் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்கா ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இங்கு கடந்த 124 ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2000ம் ஆண்டு தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தால், மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. ஆனால், அப்போது சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து சென்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக பூங்கா வரலாற்றில் இரண்டாவது முறையாக மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இம்முறை ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளியூர் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் நேரில் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.