போலீசாரால் தாக்கப்பட்ட டாக்டர்; ஏன்? எதற்கு?
1 min read
Doctor attacked by police; Why? For what?
19-5-2020
விசாகப்பட்டினத்தில் டாக்டர் ஒருவர் போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாக்டர் மீது தாக்குதல்
விசாகப்பட்டினத்தில் டாக்டர் ஒருவரை போலீஸ்காரர் ஒருவர் கால்களால் உதைத்து கீழே தள்ளி விடுவது போன்ற வீடியோ வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
போலீசாரால் தாக்கப்பட்ட டாக்டரின் பெயர் சுதாகர். விசாகபட்டினம் நரசிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக பணிபுரிகிறார்.
இவர் டாக்டர்கள் அணியும் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் என்-95 வகை முகக்கவசங்கள் அரசு டாக்டர்களுக்கு போதுமான அளவில் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினாராம். எனவே இவர் மீது அலுவல் ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில்தான் டாக்டர் சுதாகரின் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல சென்றனர். அப்போது அவரை அடித்து ரிக்ஷாவில் ஏற்றிய காட்சியை பலர் வலை தளத்தில் பார்த்தனர்.
அரசு டாக்டர் ஒருவர் இப்படி தாக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் டாக்டர் சுகாகரை அடித்து இழுத்துச் சென்ற போலீஸ்காரர் தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஆர்.கே. மீனா கூறினார்.
காரணம் என்ன?
டாக்டர் சுதாகர் ஏன் தாக்கப்பட்டார்? உண்மையில் நடந்தது என்ன என்பது என்பது குறித்து விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஆர்.கே.மீனா கூறியதாவது:-
ஆகாயபல்லெம் தேசிய நெடுஞ்சாலையில், ஒருவர் மது அருந்திவிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக நடந்துக்கொள்கிறார் என்றும் அங்கிருப்பவர்களை தகாத வார்த்தைகளில் பேசுகிறார் எனவே காவல் துறையினர் அவரை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு அழைப்பு வந்தது. உடனே போலீசார் சிலர் தேசிய நெடுஞ்சாலைக்கு
விரைந்து சென்றனர். அப்போது அங்கு பணி இடை நீக்கம் செய்யப்பட்ட டாக்டர் சுதாகர்தான் ரகளை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவர் மது பாட்டில் ஒன்றை சாலையில் வீசியுள்ளார். அங்கிருந்த பாரிகார்டுகளை அப்புறப்படுத்தி, பொது மக்களுக்கு இடையூறு செய்துள்ளார்.
போலீசார் அங்கு செல்லும் முன்பே பொது மக்கள் அவரின் கைகளை கட்டி இருந்தனர். போலீசார் சென்ற பிறகு அவர்களிடமும் அவர் ரகளை செய்துள்ளார். போலீசாரின் செல்போன்களை பறித்து வீசியுள்ளார்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் மீனா கூறினார்.