June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

மது போதையில் கணவரை கொன்ற மனைவி

1 min read
Wife who killed her husband while intoxicated

20.5.2020

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள பெருச்சாளி நத்தம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியா (28). இவர்களுக்கு 12 வயதில் மகன் மற்றும் 8 வயதில் மகள் உள்ளனர். இவர்கள் கோவை செட்டிபாளையம், பெரியகுயிலி பகுதியில் வசித்து வந்தனர். அண்ணாமலை, பிரியா இருவரும் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். கடந்த 17ம் தேதி அண்ணாமலை தனக்கும் தனது மனைவிக்கும் மது வாங்கி வந்தார். இரவு இருவரும் வீட்டில் மது குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அண்ணாமலை, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கேள்வி கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மதுபோதையில் இருந்த பிரியா, தனது கணவரை கட்டையால் சரமாரியாக தாக்கினார். ஆத்திரம் அடங்காமல், அருகில் கிடந்த கல்லை எடுத்து கணவரின் தலையில் போட்டார். இதில் அவர், அதே இடத்தில் உயிரிழந்தார். தனது கணவரை கொலை செய்த தகவலை சேலத்தில் இருக்கும் தனது அக்காளின் கணவர் செல்வராஜ் (42) என்பவருக்கு செல்போனில் தெரிவித்தார்.

அவர் கொடுத்த ஆலோசனையின்படி, அண்ணாமலை கீழே விழுந்து காயம் அடைந்து இறந்து விட்டதாக கூறி, சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றி சேலம் காகாபாளையம் பகுதிக்கு கொண்டு சென்றார். அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் துக்கம் விசாரிக்க வந்தனர். அப்போது தலையில் இருந்த காயத்தை பார்த்து சந்தேகம் அடைந்து பிரியாவிடம் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தனர். இது தொடர்பாக சேலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில், பிரியா கணவனை கொலை செய்து மறைத்து விட்டு, சடலத்தை அடக்கம் செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக கோவை செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.‌ சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார், பிரியாவை கைது செய்தனர். சடலத்தை அடக்கம் செய்ய உதவிய செல்வராஜ் என்பவரையும் கைது செய்தனர்.‌

கைதான பிரியா போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்: எனது கணவர் மது போதையில் இருந்தபோது, நீ யாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாய். ஒருநாள் நீ கள்ளக்காதலன் கூட இருக்கும்போது படம் பிடித்து விடுவேன். அப்போது நடப்பதே வேறு என மிரட்டலாக கூறினார். நான் அப்படி எதுவும் இல்லை என மறுத்தேன். ஆனால், அவர், எனது நடத்தையில் தொடர்ந்து சந்தேகப்பட்டு பேசிக்கொண்டே இருந்தார்.

நான் அவரை அடித்தபோது அவரும் என்னை திருப்பி அடிக்க முற்பட்டார். கோபத்தில் இருந்த நான், அவரை சரமாரியாக தாக்கி தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டேன். அவர் தவறி விழுந்து இறந்ததுபோல் நாடகமாடி, தனியார் ஆம்புலன்ஸ் வரவழைத்து சேலத்திற்கு சடலத்தை எடுத்துச்சென்றேன். ஆனால், உறவினர்கள் சந்தேகப்பட்டு கேள்வி கேட்டதால் போலீசில் மாட்டிக் கொண்டேன். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.