கொரோனா 2-வது அலையாக வந்து தாக்கும்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
1 min read
Corona arrives as 2nd wave, World Health Organization warns
22-5-2020
கொரோனா பாதித்த நாடுகளில் அது 2-வது அலையாக வந்து தாக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம முழுவதும் பரவி மக்களின் உயிரை குடித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றினாலும்கூட, ஏறத்தாழ 100 நாட்களுக்கு பின்னர்தான் உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்றை உலகளாவிய தொற்றுநோயாக கடந்த மார்ச் 11-ந் தேதி அறிவித்தது.
ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் அதன் பரவல் குறைந்தபாடில்லை.
கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகி உ்ளளனர்.
இந்தநிலையில் நேற்று(வியாழக்கிழமை) காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் 1 லட்சத்து ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோரை தாக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இது என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது.
இதன் மூலம் உலகமெங்கும் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 49 லட்சத்தை கடந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை அதிமாக இருக்கும் என்றும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வெளியே சொல்வதும் இல்லை பரிசோதனை செய்வதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
உலகளவில் அமெரிக்காதான் அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது. அதற்கு அடுத்த நிலையில் ரஷியா, பிரேசில், இங்கிலாந்து ஆகிய நாடுகள் அணி வகுத்து நிற்கின்றன.
ரஷியாவை பொறுத்தமட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பத்தில் இல்லை. பின்னர் அங்கு மெல்ல கால்பதித்த வைரஸ், இப்போது தினமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு காட்டுத்தீ போல பரவி வருகிறது. அங்கு இந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நேற்று மதிய நிலவரப்படி 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 2,972 ஆகவும் இருந்தது.
உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதனோம் கூறும்போது, கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வருவதற்கு இன்னும் நீண்ட தூரம் சென்றாக வேண்டும் என்று எச்சரித்தார். இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளை குறி வைத்து தாக்குவது பற்றி அவர் கவலையும் தெரிவித்தார்.
2-வது அலை
இதற்கிடையே ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மெலிடா வுஜ்னோவிக் ‘ரோசியா 24’ வானொலிக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் , “கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அச்சுறுத்தலாகத்தான் தொடர்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்வது அவசியம். கொரோனா வைரஸ் தொற்று முதல்முறையாக ஏற்பட்ட எல்லா இடங்களிலும், 2-வது அலையாக வந்து தாக்கும் வாய்ப்பு இருக்கக்கூடும்.” என்றார்.