டிஎஸ்பி உள்பட 4 பேருக்கு 10 ஆண்டு சிறை
1 min read
26.5.2020
கேரள மாநிலம் கொல்லம் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து கடந்த 2009ம் ஆண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு சாராய கடத்தல் கும்பல் மது விருந்து கொடுத்துள்ளது. இதுதொடர்பான செய்தி சில தினங்களுக்கு பின் மலையாள பத்திரிகைகளில் வெளியானது. மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட மது விருந்து செய்தி பத்திரிகையில் வெளியான தகவல் அப்போது பணியில் இருந்த டிஎஸ்பி சந்தோஷ் எம்.நாயருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அவர் நடத்திய விசாரணையில், இந்த செய்தியை பத்திரிகைகளுக்கு கொடுத்தது கொல்லம் சப்- இன்ஸ்பெக்டர் பாபுகுமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாபுகுமாரை கொலை செய்ய டிஎஸ்பி சந்தோஷ் எம்.நாயர் திட்டமிட்டுள்ளார். இதற்காக கொல்லத்தை சேர்ந்த ரவுடி கும்பலை சேர்ந்த சந்தோஷ்குமாரிடம் கூறியுள்ளார்.
சந்தோஷ்குமார் தலைமையிலான கும்பல் கடந்த 2011ம் ஜனவரி 11ம் தேதி சப்-இன்ஸ்பெக்டர் பாபுகுமாரை சரமாரியாக தாக்கியது. பலத்த காயமடைந்த அவர் பலமாத சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறினார். இதுதொடர்பாக காெல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தனக்கு திருப்தி இல்லை. எனவே குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும் என பாபுகுமார் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் அந்த விசாரணையிலும் திருப்தி இல்லாததால் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என பாபுகுமார் கொல்லம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து டிஎஸ்பி சந்தோஷ் எம்.நாயர், ரவுடி கும்பலை சேர்ந்த சந்தோஷ்குமார், வினிஷ், மகேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிஎஸ்பி சந்தோஷ் எம்.நாயர் உள்பட 4 பேருக்கும் 10 வருடங்கள் சிறை தண்டனை வித்தித்து தீர்ப்பளித்துள்ளது.