தனியார் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து நர்ஸ் தற்கொலை
1 min read
29.5.2020
நாமக்கல் அருகேயுள்ள உத்தமபாளையத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் பிரியதர்சினி (23), நாமக்கல் – மோகனூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார். கடந்த 4ம் தேதியுடன் வேலையில் இருந்து நின்று விடுவதாக, மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தொடர்ந்து பிரியதர்சினி பணிக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில், 29ம் தேதி மாலை 6 மணியளவில் நர்ஸ் பிரியதர்சினி, மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது, திடீரென அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவரை, மருத்துவமனை நிர்வாகம், திருச்செங்கோடு ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் சென்டருக்கு ஆம்புலன்சில் அழைத்து சென்றது. பின்னர் அங்கிருந்து, மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு பிரியதர்சினியை கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த நாமக்கல் போலீசார், தனியார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். நர்ஸ் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.