குழந்தைக்கு உரிமை கோரி வழக்கு 2 மாதம் காத்திருக்க ஐகோர்டு உத்தரவு
1 min read
High court order to wait 2 months for child rights case
5-5-2020
ஒரு குழந்தைக்கு உரிமை கோரிய வழக்கில், ‘அது யாருக்கு சொந்தம் என்பது, டி.என்.ஏ., சோதனையில் தெரிய வரும். அதன் பின், உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்’ என அரசு தரப்பில் தெரிவித்ததை பதிவு செய்த மதுரை ஐகோர்ட்டு கிளை, பைசல் செய்தது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குழந்தையை கேட்டு மனு
எனது கணவர் கூலி வேலை செய்கிறார். ஏற்கனவே, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. 2019-ம் ஆண்டு மேலும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. வறுமையால் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியிடம் குழந்தையை வளர்க்க கொடுத்தோம். அவர்கள் சட்டப்படி தத்தெடுக்கவில்லை. பிறப்புச் சான்று பெற அவர்கள், எங்களை தேடியபோது தொடர்பு கொள்ள முடியவில்லை எனக்கூறி, குழந்தையை விருதுநகர் குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைத்தனர்.
தற்போது நாங்கள் குழந்தையை வளர்க்க விரும்புகிறோம்.விருதுநகர் குழந்தைகள் நலக்குழுவை அணுகினோம். எங்களின் அடையாள அட்டை, குழந்தையின் பிறப்புச் சான்று உட்பட பல ஆவணங்கள் கோரினர். நாங்கள் தான் அக்குழந்தையின் உண்மையான பெற்றோர். எங்களிடம் குழந்தையை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். அரசு தரப்பில், “இவ்விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மேல் விசாரணை நடக்கிறது. டி.என்.ஏ., எனப்படும், மரபணு சோதனை நிறைவடைய, இரண்டு மாதங்கள் ஆகும். ‘அதில் உண்மையான பெற்றோர் யார் என தெரியவரும். அப்போது யாரிடம் குழந்தையை ஒப்படைப்பது என முடிவு செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை பைசல் செய்தார்.