சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா; வழக்கு விசாரணையில் மாற்றம்
1 min read
3 Coroners for Madras High court Judges; Change in the prosecution
7-5-2020
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேருக்கு தொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் வழக்கு விசாரணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காணொலி மூலம்…
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் அவசர வழக்குகளை மட்டுமே, காணொலி காட்சி வழியாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 9 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
வழக்கமாக ஆண்டுதோறும் மே மாதம் விடப்படும் கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டது.
அந்த மாதத்தில், அவசர வழக்குகளை, வீட்டில் இருந்தபடி விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. மே மாதத்தில், முதல், 15 நாட்களுக்கு, 14 நீதிபதிகளும், அடுத்த, 15 நாட்களுக்கு வேறு14 நீதிபதிகள் என மொத்தம் 28 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
ஜூன், 1 முதல், அனைத்து நீதிபதிகளும் ஐகோர்ட்டுக்கு வந்து வழக்குகளை விசாரிப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் வக்கீ்ல்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, கடந்த வாரம் நீதிபதிகள் அனைவரும் ஐகோர்ட்டு வந்து, தங்கள் சேம்பர்களில் இருந்து, காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினர்.
ஐகோர்ட்டின் மதுரை கிளையிலும், 9 மாவட்டங்களில் உள்ள செசன்சு கோர்ட்டுகளிலும், வழக்கம் போல் விசாரணை நடந்தது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, விசாரணை நடந்தது.
3 பேருக்கு கொரோனா
ஆனாலும் சென்னை ஐகோர்ட்டில் பதிவுத்துறை அதிகாரி மற்றும் ஊழியர்கள் சிலருக்கு, கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு பரிசோதனை நடந்தது. இதில் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில், மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு கூடி விவாதித்தது. அதைத் தொடர்ந்து, ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் சி.குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகம் இருப்பதாலும், உகந்த சூழ்நிலை இல்லாததாலும், ஐகோர்ட்டு இயங்குவதற்கு, வேறு அணுகுமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது. ஐகோர்ட்டு அதிகாரிகள், ஊழியர்களின் போக்குவரத்துக்கும் பிரச்சினை உள்ளது. இது, நீதிபதிகளின் பணியிலும், பாதுகாப்பு ஊழியர்களின் பணியிலும், தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே ஐகோர்ட்டில் நேரடியாக வழக்கு விசாரணை நடத்தும்படி, பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள் கோரினாலும், தற்போதைய சூழ்நிலையில், காணொலி காட்சி வழியாக மட்டுமே விசாரணை நடத்துவது என, முடிவெடுக்கப்பட்டு உள்ளது. எனவே, அவசர வழக்குகளை மட்டும், காணொலி காட்சி வழியாக விசாரிப்பது என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இரண்டும், 4 நீதிபதிகள் தனித்தனியேயும் செயல்படுவது என்றும், முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டின் மதுரை கிளையில், 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒன்றும், 3 நீதிபதிகள் தனித்தனியேயும் செயல்படுவது என, முடிவெடுக்கப்பட்டுஉள்ளது.
இந்த நடைமுறை, புதிய முடிவு எடுக்கும் வரை அல்லது இம்மாதம் முழுவதும் அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.