இ-பாஸ் பிரச்சினையால் நடுரோட்டில் நடந்த திருமணம்
1 min read
Marriage in Road due to e-pass issue
9-6-2020
இ-பாஸ் பெற முடியாததால் தமிழகம்-கேரளா எல்லையில் நடு ரோட்டில் ஒரு திருமணம் நடந்தது.
தற்போது கொரோனா பரவலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சில அம்சங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு மண்டலங்களுக்குள் இ-பாஸ் இல்லாமல் சென்றுவரலாம். மண்டலம் விட்டு மண்டலம் செல்லும்போது கண்டிப்பாக இ-பாஸ் பெற வேண்டும். அதேபோல் மாநிலம் மாநிலம்விட்டு செல்லும்போதும் இ-பாஸ் தேவை.
இப்படி இ-பாஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் நடுரோட்டில் ஒர திருமணம் நடந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
கோவை என்ஜினீயர்
கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர்கள் மூர்த்தி-பாக்கியத்தாய். இந்த தம்பதியின் மகன் ராபின்சன். என்ஜினீயரான இவருக்கும் கேரள மாநிலம் சின்னார் அருகே உள்ள மாட்டுபட்டியை சேர்ந்த சேகர்-சாந்தா தம்பதியின் மகள் பிரியங்காவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடந்தது. கடந்த மாதமே(மே) திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் திருமணம் விமரிசையாக நடத்தலாம் என்று இரு வீட்டாரும் நினைத்திருந்தனர். ஆனால் தொடர்ந்து நீடித்து வருவதால் திருமணத்தை தள்ளி வைக்க மனமில்லை. ஜூன் மாதமே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். ராபின்சன் வீட்டில் திருமணம் நடத்துவதற்காக ஏற்பாடு செய்தனர்.
இ-பாஸ்
இதனால் மாட்டுப்பட்டியில் இருந்து கோவைக்கு செல்ல இ-பாஸ் கேட்டு மணமகளின் குடும்பத்தினர் விண்ணப்பம் செய்தனர். ஆனால் கேரளாவில் இருந்து கோவைக்கு செல்ல மணப்பெண்ணுக்கு மட்டும்தான் இ-பாஸ் கிடைத்தது. மணப்பெண்ணின் பெற்றோர் உள்பட மற்ற யாருக்கும் இ-பாஸ் கிடைக்கவில்லை.
இதனால் தமிழக-கேரள எல்லையில் 8-ந் தேதி (நேற்று ) திருமணத்தை நடத்த மணமக்களின் பெற்றோர் முடிவு செய்தனர்.
இதற்காக மணமகன் வீட்டார் கோவையில் இருந்து கேரள-தமிழக எல்லைக்கு வந்தனர். அதேபோல் மணமகள் வீட்டாரும் மாட்டுபட்டியில் இருந்து எல்லை பகுதிக்கு வந்தனர்.
நடுரோட்டில்…
அதன்பின் நேற்று(திங்கட்கிழமை) ராபின்சன்-பிரியங்கா திருமணம் தமிழ்நாடு-கேரளா எல்லைப்பகுதியில் நடைபெற்றது. அதுவும் சின்னாரில் உள்ள தமிழக-கேரள எல்லையில் நடு ரோட்டில் வைத்து திருமணத்தை எளிமையாக நடத்தினார்கள்.
உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் இ-பாஸ் பிரச்சினை இன்றி இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தை முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.மணி நடத்தி வைத்தார். இதில் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர்.
திருமணம் முடிந்தபின்னர் மணமகளை, மணமகன் கோவைக்கு அழைத்து சென்றார்.