பள்ளிகள் திறந்தபிறகு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?
1 min read
New guidelines for opening schools in India
இந்தியாவில் பள்ளிகள் திறப்புக்கு புதிய வழிகாட்டுதல்கள்
கொரோனா வைரஸ் பரவலால் மூடப்பட்ட பள்ளிகளை இந்த கல்வி ஆண்டில் எப்போது திறப்பது என்று இந்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. வைரஸ் பரவல் அதிகரித்துக்கொண்டே போவதால் இன்னும் திட்டவட்டமாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
இந்த நிலையில், மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் செயல்படுத்தப்படும் வழிகாட்டுதல்களின் தற்காலிக பட்டியலை என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ளது.
அதன்படி, பள்ளி திறந்தவுடன் ஒரு வகுப்பின் மாணவர்கள் ஒன்றாகப் பள்ளிக்கு அழைக்கப்பட மாட்டார்கள். வாரத்தில் மூன்று நாட்கள் ‘ஆட்’ – ‘ஈவன்’ நம்பர் பார்முலா முறையில், ரோல் நம்பரின் படி இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் செயல்படும்.
*முதலாவதாக ‘ஆட்’ நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். இரண்டாவதாக ‘ஈவன்’ நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும்.
*இதில், ஒவ்வொரு வகுப்புகளுக்கு ஏற்ப தலா 10 நிமிடம் இடைவெளி கொடுக்க வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்ற, திறந்த வெளியில் வகுப்புகளை நடத்துவது நல்லது.
6 கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்படும்
*முதல் கட்டமாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் தொடங்கப்படும், ஒரு வாரம் கழித்து இரண்டாம் கட்டமாக 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும், 2 வாரம் கழித்து மூன்றாம் கட்டமாக 6வது முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.
*நான்காம் கட்டமாக, மூன்று வாரம் கழித்து, மூன்றாம் வகுப்பு முதல் 5வது வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். 5ஆம் கட்டமாக, 4 வாரம் கழித்து 1வது மற்றும் 2வது வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.
*5 வாரம் கழித்து, அதாவது 6வது கட்டத்தில், மழலையர் பள்ளிகள் மற்றும் எல்.கே.ஜி மாணவர்களுக்கு பெற்றோர்களின் சம்மதத்துடன் வகுப்புகள் தொடங்கப்படும்.
பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்
*ஒரு வகுப்பில் 30 முதல் 35 மாணவர்கள் வரை தான் இருக்க வேண்டும். கட்டாயம் மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் 4 அடி இடைவெளி இருக்க வேண்டும். வகுப்பறையில், ஜன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட வேண்டும். ஏ.சி போடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. ஒரு மாணவர் அமரும் நாற்காலியில், வேறொரு மாணவர் அமரக்கூடாது.
*மாணவர்கள் தினமும் ஒரே நாற்காலியில் தான் அமர வேண்டும். வகுப்புகள் தொடங்கிய பின் 15 நாட்களுக்கு ஒரு முறை குழந்தையின் முன்னேற்றம் தொடர்பாக பெற்றோர்களிடம் கலந்து பேச வேண்டும்.
*பள்ளி நிர்வாகம், வகுப்பறைகள் கிருமி நாசினி கொண்டு தினமும் சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்குள் நுழைவதற்கு முன் ஒரு முறை உடல் வெப்பம் அனைத்தும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், பேனா, பென்சில், உணவு உள்ளிட்டவற்றை மாணவர்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஒவ்வொவரும் தனியாக தண்ணீர் கொண்டு வர வேண்டும். முகக் கவசம் அணிவது கட்டாயமான ஒன்று.
*மருத்துவத் துறையிலும், பாதுகாப்புப் பணியிலும் வேலை செய்யும் பெற்றோர்கள் முன்கூட்டியே அதனைப் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்க வேண்டும்.
*தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத பெற்றோர்கள் மட்டுமே ஆசிரியர்களைக் காண அனுமதிக்கப்படுவார்கள். பள்ளிகளில் ஒருபோதும் ஆசிரியர்களுடன் எந்த விதமான சந்திப்பும் பெற்றோர்களுக்கு ஏற்பாடு செய்யக்கூடாது.
*விடுதியைப் பொருத்தவரை, 6 அடி இடைவெளியில் தான் மாணவர்களின் படுக்கைகள் இருக்க வேண்டும்.
மேற்கண்டவாறு என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரைத்துள்ளது.
இதன் மீது மத்திய-மாநில அரசுகள் தகுந்த முடிவெடுத்து, உத்தரவுகளைப்பிறப்பிக்கும்.