காலியாக காட்சி அளிக்கும் வர்த்தக கட்டிடங்கள்
1 min read
Commercial buildings with vacant display
13-6-2020
தற்போது கொரோனா பரவல் நம்மை பாடாய் படுத்துகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்தும் பரவல் தொடருகிறது.
முடங்கிய வாழ்வாதாரம்
அரசும் சுகாதாரத்துறையினரும் சொல்லும் அறிவுரைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிப்பதும் இல்லை. அதனாலும் இந்த பரவல் கட்டுப்படவில்லை .
இந்த கொரோனாவால் வீட்டில் முடங்கி கிடக்கும் பலர் வாழ்வாதாரம் முடங்கி தவிக்கிறார்கள்.
கொரோனாவுக்கு பலர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். பொதுவாக சென்னையில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் தொழில் செய்து வருகிறார்கள். குறிப்பாக மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் தொழில் நடத்துகிறார்கள். மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகத்தை சேர்ந்தவர்களும் சென்னையில் ஐக்கியமானார்கள்.
இதேபோல் கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களிலும் பலர் வந்து தங்கி உள்ளனர்.
காலியான கடைகள்
இவர்களில் பலரை கொரோனா தங்கள் சொந்த ஊர் அழைத்தது. பெரிய நிறுவனம் நடத்தியவர்கள் மட்டும் அந்தந்த பகுதியில் தங்கி இருக்கிறார்கள். சிறிய நிறுவனம் நடத்துபவர்கள் , சிறிய அளவில் கடை நடத்தியவர்கள் எல்லாம் தங்கள் தொழிலை கைவிட்டுவிட்டு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர்.
கொரோனா ஒரே மாதத்தில் முடிந்துவிடும் பின்னர் வந்து தொழில் நடத்தலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. கொரோனா எப்போது கட்டுக்குள் வரும் என்று தெரியாததால் அவர்கள் தற்போது தங்கள் தொழில் செய்யும் ஊருக்கு செல்ல விருப்பம் இல்லாமல் உள்ளனர். சொந்த ஊரில் ஏதாவது தொழில் செய்து கஞ்சியோ கூழோ சொந்த ஊரில் குடித்து வாழலாம் என்ற மன நிலைக்கு வந்துள்ளனர்.
எனவே சென்னை போன்ற நகரங்களில் தாங்கள் வாடகைக்கு பிடித்த கடை வீடு போன்றவற்றை வேண்டாம் என்று போனில் தகவல் சொல்லிவிட்டனர்.
மேலும் சென்னையில் வசிக்கும் பலர் தங்கள் தொழிலை வீட்டில் இருந்தே செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் சென்னை போன்ற நகரங்களில் வீடு, கடைகள் பல காலியாக உள்ளன. கொரோனா காலத்தில் அவை வாடகைக்கு போகவில்லை. ஒத்திக்கும் யாரும் கேட்கவில்லை. வாடகையை குறைத்தும் வருவதற்கு ஆள் இல்லை.
ரியல் எஸ்டேட்
உலகம் முழுவதும் எல்லா தொழிலும் நலிவடைந்துவிட்டது. தற்போது தொழில்கள் தொடங்க அரசு அனுமதித்தாலும் பலரால் இன்னும் தொழிலை நடத்த முடியாத நிலையில்தான் உள்ளனர். இதனால் மக்களிடம் பண நடமாட்டம் இல்லாதததால் ரியல் எஸ்டேட் பெரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது. யாரும் தற்போது விலைக்கு வாங்க ஆள் இல்லை.
-டி.பாலசுப்பிரமணியன், மூத்த பத்திரிகையாளர்.