July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

நள்ளிரவில் வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி 20 பவுன் நகை கொள்ளை -பழநி அருகே துணிகரம்

1 min read

கொள்ளை நடந்த வீடு

15.6.2020

20-pound jewelry robbery

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ள தாழையூத்தை சேர்ந்தவர் முருகசாமி(60). விவசாயி. இவரது மனைவி சின்னத்தாய்(50), மகள்கள் காவ்யா(22), சங்கவி(18), மகன் செல்வபிரகாஷ்(15). முருகசாமி தனது குடும்பத்தினருடன் கிராம எல்லையில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். முருகசாமியுடன் அவரது சகோதரி காளியாத்தாவும், அவரது பேத்தி சத்யாஸ்ரீயும் வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு முருகசாமியும், சின்னத்தாயும் வீட்டின் வெளியில் படுத்திருந்தனர். மற்றவர்கள் வீட்டின் உள்ளே படுத்திருந்தனர். நள்ளிரவு 11.45 மணியளவில் முகக் கவசம், டீ சர்ட் அணிந்து வந்த 10 பேர் கும்பல் தோட்டத்துக்குள் நுழைந்தது. அங்கு வீட்டின் முன்பு படுத்திருந்த முருகசாமி மற்றும் சின்னத்தாயை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது.

சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே படுத்திருந்த முருகசாமியின் குடும்பத்தினர், ஜன்னல் வழியாக வெளியே பார்த்தனர். அவர்களிடம் வீட்டின் கதவை திறக்காவிட்டால், முருகசாமியையும், சின்னத்தாயையும் கொலை செய்து விடுவோம் என்று கொள்ளையர்கள் மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கதவை திறந்தனர். வீட்டுக்குள் புகுந்த ெகாள்ளையர்கள், முருகசாமியின் குடும்பத்தினர் அணிந்திருந்த தோடு, வளையல், செயின் உள்ளிட்ட 20 பவுன் நகைகளை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி, பறித்து விட்டு தப்பியோடினர்.

இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசில் முருகசாமி புகார் செய்தார். எஸ்பி சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை தொடர்பாக போலீசார், வழக்குப்பதிந்து, கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

வீடு புகுந்து அரிவாள் முனையில் நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் பழநி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாய்களுக்கு வெட்டு: தோட்டத்திற்குள் கொள்ளையர்கள் நுழைந்தபோது, அங்கு காவலுக்கு இருந்த நாய்கள் அவர்களை பார்த்து குரைத்துள்ளன. ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அரிவாளால் நாய்களை விரட்டி வெட்டியுள்ளனர். இதில் ஒரு நாய் படுகாயமடைந்தது.

படிச்சதுக்கு வேலையில்ல அதான் கொள்ளை: முருகசாமியின் மகள் சங்கவி, தேனியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்றிரவு வீடு புகுந்த கொள்ளையர்களிடம், கொள்ளையடிப்பது ஒரு தொழிலா? என்று துணிச்சலாக கேட்டுள்ளார். இதற்கு கொள்ளையர்களின் ஒருவன் தான் சட்டப்படிப்பு படித்துள்ளதாகவும், வேலை வாய்ப்பில்லாததால் கொள்ளை தொழிலில் ஈடுபட்டு வருவதாவும் சங்கவியிடம் பதில் கூறியுள்ளான். இதன் மூலம் கொள்ளை கும்பலில் வழக்கறிஞர் ஒருவரும் உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

வீட்டின் முன்பு படுத்திருந்த பெற்றோரை கொள்ளையர்கள் தாக்கிய போது, அதனை முருகசாமியின் குடும்பத்தினர் தங்களது செல்போன்களில் படம் பிடித்துள்ளனர். இதனை கவனித்த கொள்ளையர்கள் அவர்களிடமிருந்த 4 செல்போன்களை பறித்தனர். 2 போன்களை தண்ணீரில் போட்டு செயலிழக்க செய்த கொள்ளையர்கள், 2 போன்களை அரிவாளால் உடைத்து நொறுக்கி விட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.