June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 19-ந் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு

1 min read
Curfew in Chennai, Chengalpattu, Tiruvallur and Kanchipuram districts from 19th June

15/6/2020

4டுத்த சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் வருகிற 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல்

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் முடியாத நிலையே நீடிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில்தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. சென்னை மட்டுமின்றி சென்னையோடு ஒன்றிணைந்து இருக்கும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகமாகவே இருந்து வருகிறது.

அதனால்தான் மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் இந்த மாட்டங்களில் எந்த தளர்வும் கொடுக்கப்படவில்லை. மேலும் இந்த மாவட்டங்களில் பஸ், ரெயில் போக்குவரத்தும் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பெருமளவு தளர்வு கொடுக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

முழு ஊரடங்கு

இதனால் சென்னை உள்பட 4 மாவட்டங்களி்ல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் இதை தமிழக அரசு மறுத்தது.

ஆனால் இந்த நிலையி்ல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த 4 மாவட்டங்களிலும் மீண்டும் முழுஊரடங்கு கொண்டுவரப்படுவதாக அறிவித்தார்.

அதாவது வருகிற 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 12 நாட்கள் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எந்தெந்த பகுதிகள்

 கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு ஜூன் 19 நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் , திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்டப்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

அத்தியாவசிய தளர்வுகள்

அதே நேரத்தில் கீழ்கண்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் தளர்வு அளிக்கப்படுகிறது.

1. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்தங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்

2. வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. எனினும் அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

3. மாநில அரசு துறைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமை செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, கருவூலத்துறை, ஆவின் , உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை போன்ற துறைகள் தேவைப்படும் பணியாளர்களுடன் செயல்படும்

4. மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்படும்.

5. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வர தேவையில்லை.

ஏ.டி.எம்.கள்


6. வங்கிகள் 33 சதவீத பணியாளர்களுடன் 29 மற்றும் 30 தேதிகளில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.

ரேஷன் கடைகள்

7. பொது விநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். பொது விநியோக திட்டத்திற்கு தொடர்புடைய இந்திய உணவுக்கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகள் மற்றும் அதைசார்ந்த போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்படும் பொது விநியோக கடைகள் இயங்காது. அந்த பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்க அரசு அறிவித்த நிவாரணங்கள், அக்கடை பணியாளர்களால் நேரடியாக வழங்கப்படும்.

9. காய்கறிகடைகள், மளிகைக்கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அதேபோல், காய்கறி,பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படு அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்களை வாங்கும் பொது மக்கள், வாகனங்களை பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே அதாவது 2 கி.மீ., தொலைவில் மட்டும் நடந்து சென்று பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

உணவகங்கள்

10. உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் இயங்க அனுமதியில்லை.

11. முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர்/நோயாளிகளுக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

12. அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.

13. பொது மக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியோடுஇயங்கலாம்

14. அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள்

15. நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள்

கட்டுமானப்பணி

16. மேற்கண்ட 12 நாட்களுக்கு பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்துபணிபுரியும் தொழிலாளர்களை கொண்ட கட்டுமான பணி அனுமதிக்கப்படும்.

17. சரக்கு போக்குவரத்திற்கும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் தடை கிடையாது.

18. சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் இபாஸ் அனுமதி வழங்கப்படும்.

19. வெளி மாநிலத்தில் இருந்து வருகின்ற ரெயில்களுக்கும், விமானங்களுக்கும் அதேபோல வெளிநாட்டில் இருந்துவருகின்ற விமானங்களுக்கும் கப்பல்களுக்கும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.

ஞாயிற்றுக்கிழமைஜூன் 21 மற்றும் 28 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட எந்த வித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இவ்விரு நாட்களிலும் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள் , அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.