கள்ளக்காதலியை கொன்று கோழிக்கடைக்காரர் தற்கொலை
1 min read
15.6.2020
Shopper commits suicide by killing his girlfriendகோவை காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் சக்திவேல். கூலி தொழிலாளி. இவரது மனைவி திலகவதி (33). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காளப்பட்டி ரோடு மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது திலகவதிக்கும், அதே பகுதியை சேர்ந்த மனைவியைப் பிரிந்து வாழும் கோழிக்கடைக்காரர் பத்மநாபன் (37) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இதேபோல் நேற்று முன்தினம் இரவு திலகவதியும், பத்மநாபனும் காளப்பட்டி ரோட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தங்குவதற்காக போடப்பட்ட கொட்டகையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
அப்போது திலகவதி தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பத்மநாபன் அங்கிருந்த சுத்தியலை எடுத்து திலகவதியின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து திலகவதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதை எதிர்பாராத பத்மநாபன் போலீசில் மாட்டி விடுவோம் என்ற பயத்தில் அதே கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று மாலை அந்த வழியாக சென்ற காவலாளி ஒருவர் கொட்டகை கதவு மூடப்பட்டிருந்ததை பார்த்து, சந்தேகத்தின் பேரில் பீளமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு பேர் சடலமாக கிடந்துள்ளனர். பின்னர் அவர்களின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதலால் நடந்த இந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.