கைதான வாலிபர்களிடம் பறிமுதல் செய்த செல்போன்களில் 34 ஆபாச வீடியோக்கள்
1 min read
16.6.2020
34 porn videos on cell phones confiscated by detaineesவேலூர் பாகாயம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் குளிக்கும்போது ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சிறுமி கடந்த 12ம் தேதி காலை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். அவருக்கு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடியோ எடுத்து மிரட்டிய துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த கணபதி(18), பென்னாத்தூரை சேர்ந்த ஆகாஷ்(20) மற்றும் சிறுமியின் வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களில் 17 வயது சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கணபதி பார்ஸ்டல் பள்ளியிலும், ஆகாஷ் வேலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியிடம் வேலூர் ஜேஎம் விரைவு நீதிமன்ற நீதிபதி இருதயமாரி கடந்த 13ம்தேதி மதியம் நேரில் சென்று வாக்குமூலம் பெற்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வாக்குமூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தீக்குளித்த 15 வயது சிறுமி அருகிலுள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் வீட்டின் அருகில் வசிக்கும் 17 வயது சிறுவன் மற்றும் கணபதி, ஆகாஷ் ஆகியோர் சிறுமி குளிப்பதை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். இதை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த சிறுமி தீக்குளித்துள்ளார்.
தீக்குளித்த சிறுமியை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்லும் வழியில் 4 பேர் கும்பல் ஓடஓட விரட்டி பிளேடால் வெட்டியுள்ளது. இதுதொடர்பான புகாரின்பேரில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறுமியை பிளேடால் வெட்டியவர்கள் யார் என்பது தெரியவில்லை. அடுத்தக்கட்டமாக மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது’ என்றனர்.
இந்நிலையில், கைதான வாலிபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பல பெண்கள் சம்பந்தப்பட்ட 34 ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும், பலரை மிரட்டி பணம் பறித்தது போன்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கேற்ப சிறுமி கொடுத்த வாக்குமூலத்தில், ‘நான் மட்டுமின்றி, என்னை போன்று பல பெண்களை வீடியோ எடுத்து வைத்துள்ளனர். அதில் ஒரு மூதாட்டியும் இருக்கிறார். என்னை தொடர்ந்து மிரட்டியதோடு, ₹5 ஆயிரம் வேண்டும் என்று கேட்டனர்’ என்று தெரிவித்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே சிறுமியை பிளேடால் வெட்டிய கும்பலை கைது செய்ய வேண்டும் என்று மாதர் சங்கங்கள் சார்பில் கோரிக்கைகள் எழுந்தது. ஆனால் போலீசார் அலட்சியமாக விட்டுவிட்டதால் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறுமியை பிளேடால் வெட்டியது வடமாநில கும்பல் என்று கூறி அப்போது போலீசார் வழக்கை மூடிவிட்டனர். இதில் அரசியல் பிரமுகர்களின் டார்ச்சர் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சிறுமி தீக்குளித்துள்ள நிலையில், பெயரளவிற்கு 3 பேரை மட்டும் கைது செய்துவிட்டு, பின்னணியில் இருந்து செயல்பட்ட கும்பலை தப்பிக்க வைப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.