நாட்றம்பள்ளி அருகே டெய்லர் சுட்டுக்கொலை
1 min read
16.6.2020
Taylor shot dead near Nattarampallyதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி போத்தகுட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜி(53), டெய்லர். இவர் பச்சூரில் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 4ம்தேதி நாட்றம்பள்ளி அருகே உள்ள ஜெயந்திபுரம் பகுதியில் இரவு 9.30 மணியளவில் ரத்தக்காயத்துடன் மயங்கி கிடந்தார்.
தகவலறிந்த நாட்றம்பள்ளி போலீசார், அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார்.
அவருக்கு கடந்த 7ம்தேதி டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது அவரது முதுகில் இரண்டு குண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கோவிந்தராஜி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். யாரோ மர்ம ஆசாமிகள் நாட்டுத்துப்பாக்கியால் டெய்லரை சுட்டுள்ளனர். டெய்லரை சுட்டுக்கொன்றவர்கள் யார், எதற்காக இந்த கொலை நடந்தது, கொலையாளிகளுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.