கோவில்பட்டி அருகே சென்னையிலிருந்து உறவினர்களை அழைத்து வந்த தலைமையாசிரியர் மீது வழக்கு
1 min read
17.6.2020
Case against the headmaster who brought relatives from Chennaiதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராஜிவ்நகர் இ.பி.காலனியை சேர்ந்த கோயில்பிள்ளை மகன் அமல்ராஜ் (47). வீரபாண்டியாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவ பரிசோதனைக்காக தனது காரில் சென்னை ஸ்ரீபெரும்புதூர் சென்று திரும்ப கடந்த 5 முதல் 7ம் தேதி வரை 3 நாட்களுக்கு இ-பாஸ் பெற்றுள்ளார்.
இதையடுத்து, 5ம் தேதி கோவில்பட்டி அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் இருந்து எட்டயபுரம் வழியாக 2 உறவினர்களுடன் அமல்ராஜ் காரில் சென்னைக்கு சென்றார். ஸ்ரீபெரும்புதூரில் உறவினர்கள் இருவரையும் இறக்கி விட்டு, அங்கிருந்து திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அசோக்நகருக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து உறவினர்கள் 2 பேரை ஏற்றிக் கொண்டு காரில் கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை கிராமத்திற்கு கடந்த 7ம் தேதி வந்தடைந்தார்.
இந்நிலையில் அவர் அழைத்து வந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியதில், அமல்ராஜ் காரில் ஊருக்கு அனுமதி இல்லாமல் வந்தது தெரியவந்தது. இதனால், உண்மையான காரணத்தை மறைத்து சென்னை சென்று வந்ததை வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும் அவர் 2 முறை இவ்வாறு போலி காரணங்களைக் கூறி சென்னை சென்று வந்தது தெரியவந்தது. இதுகுறித்து பாண்டவர்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ், அமல்ராஜ் மீது கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் கோவில்பட்டி தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டார். அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.