“பேச முடியாத இடத்துக்கு செல்கிறேன்” ராணுவ வீரர் பழனியின் கடைசிக் குரல்
1 min read
The last voice of the soldier Palani
17-6-2020
எல்லை பகுதியில் வீர மரணம் அடைந்த ராணுவவீரர் பழனி பேச முடியாத இடத்துக்கு செல்கிறேன் என்று தனது மனைவியிடம் கடைசியாக பேசியுள்ளார்.
ராணுவ வீரர் பழனி
இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட போரில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். அவர்களில் தமிழ வீரர் பழனியும் ஒருவர்.
இவர் ராணுவத்தில் ஹாவில்தாராக பணிபுரிந்து வந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், கடுகலூர் கிராமத்தில் காளிமுத்து மற்றும் லோகாம்பால் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தவர்தான் பழனி. இவருக்கு இரு சகோதரர்கள் உள்ளனர்.
இவரது தம்பி இதயகனி(25)யும் ராணுவத்தில் தான் பணியாற்றி வருகிறார். தற்போது, ராஜஸ்தானில் உள்ள அவர் தான் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, பழனி இறந்த தகவலை முதலில் தெரிவித்துள்ளார்.
பழனி சாதாரண குடும்பத்தில் பிறந்ததால் அவரால் 10ம் வகுப்புக்கு மேல்படிக்க முடியவில்லை. தனது 18 வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்தார். வேலைக்குச் சேர்ந்த பின்னர் தான் தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 முடித்து பிஏ பட்டமும் பெற்றார்.
இவரது மனைவி வனிதாதேவி(33). இவர் தனியார் கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள். மகன் பிரசன்னா(10), மகள் திவ்யா(8).
வீடு கட்டும் பணி
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழனி 15 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது ஏற்கனவே சொந்தமாக வீடு கட்டும் முயற்சியில் இறங்கினார். அதாவது வீட்டுக்கடன் வாங்கும் பணியில் எப்போதும் பிசியாக இருந்துள்ளார். வீடு கட்டுவதற்காக ஆரம்ப கட்ட பணிகளுக்காக மனைவியின் நகைகளை விற்றுள்ளார்.
இன்னும் சில ஆண்டுகளில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று அதில் கிடைக்கும் பணம் மூலம் கடனை அடைத்து அடைத்துவிடலாம் என்றும் சொல்லி வந்தார். அதன்பின் வீடு கட்டும் பொறுப்பை தனது மனவைி மற்றும் உறவினர்களிடம் கொடுத்துவிட்டு பணிக்குத் திரும்பி விட்டார்.
பழனியின் பிறந்த நாள் கடந்த 3-ந் தேதி. அன்றுதான் அவர் கட்டிய புதிய வீட்டிற்கு புதுமனைப்புகு விழா நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பழனியால் கலந்து கொள்ள முடியவில்லை. விழாவுக்கு வரும்படி கடந்த1-ந் தேதி, அவரது மனைவி வனிதா போன் மூலம் அழைத்தார். ஆனால், தற்போது வரக்கூடிய சூழ்நிலை இல்லை என்றும் விடுப்பு கிடைக்காது என்றும் பழனி கூறிவிட்டார். விழாவை சிறப்பாக நடத்தும்படியும் கூறியுள்ளார்.
கடைசி குரல்
அதன்பின் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவியிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது தான் தொடர்பு கொள்ள முடியாத பகுதிக்கு செல்கிறேன். அங்கிருந்து என்னால் பேச முடியாது அதனால், நீங்கள் கவலைப்பட வேண்டாம் என கூறியுள்ளார்.
சுமார் 4 நிமிடங்கள் மட்டுமே பேசிய இந்த பேச்சுத்தான் மனைவி வனிதாவுடம் அவர் பேசிய கடைசி குரல்.
அதன்பின் அவர் பேச முடியாத இடத்திற்கே சென்றுவிட்டார்.
பழனியின் மாமனார் நாச்சியப்பன் கூறியதாவது:-
கடந்த 3-ந் தேதி வீடு கிரகபிரவேசம் நடக்கும் போது, ஹோமம் வளர்க்கப்பட்டது. அப்போது, கூறப்பட்ட மந்திரங்களை தொலைபேசி மூலம் பழனி கேட்டார். இதனை தெரிந்த எனது மகள் கவலைப்பட்டார். எல்லையில் அமைதி திரும்பும் என நான் தான் ஆறுதல் கூறினேன்.
இவ்வாறு அவர் அழுது கொண்டே கூறினார்.