கீழடியில் கிடைத்த தங்க நாணயம்: பரபரப்பான புதிய ஆதாரங்கள்- அமுதன்
1 min read
Gold coin found under: Exciting new sources By Amuthan
19-6-2020

தொல்லியல் ஆய்வாளர் அமுதன் என்ற தனசேகரன் அவர்கள் பிரபல நாளிதழான தினத்தந்தியில் நீண்ட காலம் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். இவர் பல்வேறு ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். பொதுவாக ஆராய்ச்சி நூல் என்றால் சாதாரண மக்களால் படித்து எளிதாக புரியும் தன்மையில் இருக்காது. ஆனால் அமுதன் அவர்களின் எழுத்து பாமர மக்களையும் படித்து உணர வைக்கும்.
அவர் “மண்மூடிய மகத்தான நாகரிகம்” என்ற ஆய்வு புத்தகத்தில் ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி பற்றிய பல தகவல்களை தந்துள்ளார்.
தற்போது கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயம் பற்றி அவர் இங்கே விளக்குகிறார்….
மதுரை நகருக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. அவற்றில் எல்லாம் தலையானது, சுமார் 1,800 ஆண்டுகளாக பாண்டிய தேசத்தின் தலைநகராக அந்த நகர் நீடிக்கிறது என்பது தான்.
சேரர், சோழர் மன்னர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வசதியான இடத்தை தலைநகரை அமைத்துக் கொண்டார்கள். இதனால் ஒவ்வொரு மன்னரின் காலக்கட்டத்திலும் ஒவ்வொரு ஊர் தலைநகராக இருந்து இருக்கிறது.
ஆனால், பாண்டிய மன்னர்களின் தலைநகராக என்றும் மாறாமல், 1,800 ஆண்டுகளாக தொடர்ந்து இருந்தது மதுரை மட்டுமே.
பழம் பெருமை மிக்க மதுரையிலும், அதன் வைகை நதிக் கரை நெடுகிலும் தொல்பொருள் ஆய்வு நடத்தினால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்வின் எச்சங்களைக் கண்டுபிடிக்கலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் பேரில், 16 ஆண்டுகளுக்கு முன் அங்கே ஆய்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வைகை நதியின் கரையில் அமைந்துள்ள கீழடியில் 2015-ம் ஆண்டு, முதன் முறையாக தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட்டது.
2017-ம் ஆண்டு வரை மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வில், செங்கற்களால் கட்டப்பட்ட பழங்கால கட்டிட சுவர்கள், உறை கிணறுகள், கழிவுநீர்க் கால்வாய் வசதிகள், ஆலை ஒன்று இயங்கியதற்கான தடயங்கள், தமிழ் பிராம்மி எழுத்துக் கொண்ட பானை ஓடுகள், நெசவுக்குத் தேவையான கருவிகள், பெண்கள் அணியும் ஆபரணங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவை உள்பட 7,800 பழங்காலப் பொருட்கள் அங்கே கிடைத்தன.
தமிழகத்தில் ஏற்கனவே பல இடங்களில் தொல்பொருள் ஆய்வுகள் நடைபெற்று இருந்தாலும், செங்கல்லால் கட்டப்பட்ட சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டது கீழடியில் தான் முதல் முறை என்பதால் இந்த ஆய்வு, உலகை திரும்பிப் பார்க்க வைத்தது.
தமிழர்களின் பழங்கால நாகரிக வாழ்வுக்கு அசைக்க முடியாத ஆதரமாக இது திகழ்ந்தது.
கீழடியில் கிடைத்த பொருட்களை “ரேடியோ கார்பன் டேட்டிங்” என்ற பகுப்பாய்வுக்கு அனுப்பியபோது, அவை தமிழர்களின் நாகரிகம், 2,600 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்ற ஆச்சரியமான தகவலைத் தந்தது.
சிந்துசமவெளி நாகரிகப் புகழை இது மங்கச் செய்துவிடுமோ என்ற சிலரின் எண்ணத்தால், அங்கே சில காலம் நிறுத்தி வைக்கப்பட்ட ஆய்வுகள், பலரது அழுத்தத்தின் பேரில் இப்போது மீண்டும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
கடந்த மாதம் கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வில், மேலும் சில கட்டிட சுவர்களும், பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இப்போது அங்கே தங்க நாணயம் ஒன்று, முதன் முறையாகக் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.
பல நாடுகளின் வர்த்தகர்களும் வந்து செல்லும் இடமாக கீழடி இருந்தது என்பதை இந்த தங்க நாணயக் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தி இருக்கிறது என்று கூறலாம்.
அங்கே தோண்டி எடுக்கப்பட்ட தங்க நாணயம், ஒரு சென்டிமீட்டர் சுற்றளவு கொண்டதாக இருக்கிறது. அதன் எடை 300 மில்லி கிராம்.
அந்த நாணயத்தின் முன் பகுதியில் நாமம் போல மூன்று கோடுகள் காணப்படுகின்றன. அதன் நடுவே சூரியன் போன்ற சின்னமும் அதன் கீழே சிங்கத்தின் உருவம் ஒன்றும் உள்ளது.
நாணயத்தின் பின்பகுதியில் 12 புள்ளிகளும், அவற்றின் கீழே இரண்டு கைகள், இரண்டு கால்கள் கொண்ட ஓர் உருவமும் உள்ளன.
இந்த நாணயம், 17-வது நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த “வீர ராயன் பணம்” என்பதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தங்க நாணயக் கண்டுபிடிப்பு, கீழடி ஆய்வில் முக்கிய திருப்பத்தைத் தந்து இருக்கிறது.
தமிழர்களே உலக நாகரிகத்தின் முன்னோடிகள் என்பதை நிரூபிக்கும் இன்னும் பல ஆதாரங்கள், கீழடியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிடைக்கும் என்பது ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.