கொரோனா எப்போது முடியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்- எடப்பாடி பழனிசாமி பேட்டி
1 min read
God knows when the corona can end up – Edapadi Palanisamy
20-6-2020
கொரோனா பரவல் எப்போது முடியும் என்பது கடவுளுக்கே தெரியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இன்று 2-வது நாள் ஊரடங்காகும். 30-ந் தேதி வரை இந்த ஊரங்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான மையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களாலேதான் தமிழகத்தில் கொரோனா பரவியுள்ளது.
கொரோனா காலத்தில் டாக்டர்கள், நர்சுகளின் பணி சிறப்பாக உள்ளது. அவர்களின் பணியால்தான் அதிகமாக குணமடைந்து வருகிறார்கள்.
தினமும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் இதுவரை 8 லட்சத்து 27 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. வசதி இருப்பவர்கள் தான் தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர்.
கடவுளுக்குத்தான் தெரியும்
மக்களின் ஒத்துழைப்பு அவசியம். கொரோனா பரவலை தடுக்கும் முயற்சிக்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது மக்களை சிரமப்படுத்துவதற்கு அல்ல; கொரோனாவை தடுக்கவே. கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும். தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
தனக்கு கொரோனா தொற்று இல்லை என அமைச்சர் அன்பழகனே கூறிவிட்டார்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.