இ-பாஸ் இல்லாமல் மதுரை வந்த போலி ஐஏஎஸ் அதிகாரி கைது
1 min read
22.6.2020
Fake IAS officer arrested for coming to Madurai without e-passகொரோனா தொற்று காரணமாக, சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அங்கிருந்து மக்கள் வேன், கார் மூலம் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் மதுரையில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கலெக்டர் வினய் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளை கொண்டு 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, நகர் எல்லைப்பகுதியில் வெளியூரில் வருபவர்களை கண்காணித்து வருகின்றனர்.
நேற்று காலை திண்டுக்கல் சாலை கரிசல்குளம் அருகே போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சொகுசு கார் இ-பாஸ் இல்லாமல் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதிலிருந்த இளைஞர் ஒருவர் தன்னை பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி என கூறி, சான்றிதழ் ஒன்றை போலீசாரிடம் கொடுத்தார். அதனை ஆய்வு செய்து பார்த்தபோது, அது போலியானது என தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த வேலுமணி (38) என்பதும், சென்னையில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரை வந்ததும் தெரிந்தது. கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இவர் ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி சொகுசு காரில் சென்று எங்கெல்லாம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும், கொடைக்கானல் போன்ற இடங்களில் மோசடி செய்துள்ளாரா என்றும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.