போலீசார் தாக்கியதில் சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் சாவு -சாத்தான்குளத்தில் மறியல்
1 min read
23/6/2020
A father and son jailed for assaulting policemenகோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர். போலீசார் தாக்கியதில் அவர்கள் இறந்ததாக கூறி சாத்தான்குளம் மற்றும் பேய்குளத்தில் வியாபாரிகள் இன்று கடையடைப்பு மற்றும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (58). இவரது மனைவி செல்வராணி. ஜெயராஜ் அங்குள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் காமராஜர் சிலை அருகில் பனைமரக்கட்டைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவர்களது மகன் பென்னிக்ஸ் (31). தந்தையின் கடை அருகிலேயே செல்போன் கடை வைத்திருந்தார்.
ஊரடங்கையொட்டி கடந்த 19ம்தேதி இரவு அந்த வழியாக ரோந்து சென்ற சாத்தான்குளம் போலீசார், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அங்குள்ள கடைகளை அடைக்குமாறு கூறியுள்ளனர். இதற்கு பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதையடுத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். போலீஸ்நிலையத்தில் வைத்து விசாரணைநடத்திய பின் இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் பென்னிக்ஸ் திடீரென்று தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சிறைத்துறை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் சிறை காவலர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பென்னிக்ஸ் இறந்தாா்.
தகவலறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி கலைகதிரவன், கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் அரசு மருத்துமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். பென்னிக்ஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜூக்கு இன்று (23ம்தேதி) காலை 6 மணியளவில் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் ஜெயராஜூம் இறந்தார். அவரது உடலும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் இறந்ததாகவும், இதனால் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரவிகணேஷ் உள்ளிட்ட 9 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் சாத்தான்குளம் மற்றும் பேய்குளத்தில் வியாபாரிகள் இன்று கடையடைப்பில் ஈடுபட்டனர். சுமார் 600க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

மேலும் பழைய பஸ் ஸ்டாண்ட் காமராஜர் சிலை அருகில் பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் சாவுக்கு காரணமான போலீசாரை கைது செய்யக்கோரி வக்கீல் மணிமாறன் தலைமையில் இன்று காலை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் டிஎஸ்பி பிரதாபன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தையொட்டி அங்கு பதற்றவும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ்நிலையத்தில் தந்தை மகனை கடுமையாக போலீசார் தாக்கியுள்ளனர் என்றும் மலத்துவாரத்தில் தடியை நுழைத்து சித்ரவதை செய்ததாகவும் பென்னிக்ஸ் கூறியதாக அவரை சந்தித்தவர்கள் தெரிவித்ததால் மேலும் பரபரப்பு நிலவுகிறது.
மாஜிஸ்திரேட் விசாரணை
கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர். இதுதொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடக்கிறது. இந்த விசாரணையின் முடிவிலேயே போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் இறந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும்.
சஸ்பெண்ட்
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக இன்று போராட்டக்காரர்களுடன் மாவட்ட கலெக்டர் பேச்சு நடத்தி விளக்கம் அளித்தார். அப்போது சம்பவத்தில் தொடர்புடைய இருபோலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.