கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து; விளக்கம் அளிக்க மத்திய அரசு உத்தரவு
1 min read
Ayurvedic medicine for corona; Central government order for clarification
23-6-2020
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து முழுவதும் குணமடைய வைக்கும் ஆயுர்வேத மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால் இதுபற்றி விளக்கம் அளிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நிருபர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆயுர்வேத மருந்து
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான மருந்துக்காகவும், தடுப்பூசிக்காகவும் ஒட்டு மொத்த உலகமே காத்திருக்கிறது. இந்தத் தருணத்தில் பதஞ்சலி ஆய்வக மையம் மற்றும் தேசிய மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து கூட்டு முயற்சியாக மருத்துவ ரீதியிலான சோதனை அடிப்படையிலும், ஆய்வுகள் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்ட முதல் ஆயுர்வேத மருந்தை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம்.
முழுமையான குணம்
இந்த மருந்து 3 முதல் 7 நாள்களில் 100 சதவிகிதம் முழுமையாக குணமடைய வைக்கிறது. கொரோனில் மற்றும் சுவாசரி எனும் கொரோனா தொற்றுக்கான மருந்துகளை நாங்கள் இன்று அறிமுகப்படுத்துகிறோம். நாங்கள் இரண்டு சோதனைகளைச் செய்துள்ளோம்.
முதலில் டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மருத்துவ ரீதியிலாக ஆய்வு மேற்கொண்டோம். இதில் 280 நோயாளிகள் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் குணமடைந்தனர். இந்த மருந்து மூலம் கொரோனா மற்றும் அதன் விளைவுகளைக் கட்டுப்படுத்த முடிந்தது. இதன் பிறகு, மிகவும் முக்கியமான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஜெய்ப்பூரில் உள்ள தேசிய மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உதவியுடன் 95 நோயாளிகளுக்கு மருத்துவ ரீதியிலான சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மூன்றே நாள்களில் 69 சதவிகிதத்தினர் குணமடைந்தனர். அவர்களுக்கு 3 நாள்களில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதேநேரம் 7 நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அனுமதி
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தைப் பயன்படுத்த, சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடமிருந்து அனுமதி பெறுவதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு பாபா ராம்தேவ் கூறினார்.
மத்திய அரசு எச்சரிக்கை
இந்த நிலையில் கொரோனாவிற்கு தனது பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாக செய்து வரும் விளம்பரத்தை நிறுத்துமாறு, யோகா குரு பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனாவிற்கு பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாக, ஊடகங்களில் வெளியாகும் செய்தி குறித்தும் அதன் உண்மைத்தன்மை குறித்தும் அறிந்து கொள்வதற்காக, கீழ்காணும் தகவல்களை உடனே அளிக்குமாறு பதஞ்சலி நிறுவனம் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறப்படும் மருந்தின் பெயர் மற்றும் அதன் உள்ளீட்டுப் பொருட்கள், இதற்கான ஆராய்ச்சி நடைபெற்ற மருத்துவமனை அல்லது வேறு இடம் குறித்த விபரங்கள், செய்முறை, சோதனைக்கு எடுத்துக் கொள்ளபட்டோரின் விவரங்கள், பரிசோதனை தர நிர்ணயக் குழுவின் அனுமதி மற்றும் தொடர்புடைய இதர அமைப்புகளின் அனுமதி குறித்த விவரங்கள், சோதனை முடிவுகளின் முழுமையான அறிக்கைகள் ஆகியவற்றை வேண்டுகிறோம்.
இதுகுறித்து முழுமையாக ஆராய்ந்து தெரிவிக்கும் வரை, கொரோனாவிற்கு தனது பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாக விளம்பரம் செய்யக் கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.