நெல்லை அருகே ஒன்றரை வயது பெண் குழந்தையை விற்ற தாய் உள்பட 6 பேர் கைது
1 min read
23.6.2020
Six arrested including mother for selling infant childதென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த வீரபுத்திரன் மகன் கணபதி (30), சென்னையில் தனியார் ஓட்டலில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ரோஸ்லின். தம்பதிக்கு அபிஷா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்த ரோஸ்லின் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் குழந்தையுடன் வசித்து வந்தார். பொருளாதார நெருக்கடியால் சேரன்மகாதேவி முடுக்குத் தெருவில் வசித்து வரும் உறவினரான நடராஜன் மகன் சுரேஷ் (30) மூலம் குழந்தையை விற்க முடிவு செய்தார். அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பள்ளக்கால் பொதுக்குடியை சேர்ந்த சுடலைமுத்து மகன் குமார் (39) என்பவரிடம் பாபநாசம் கோயில் அருகே ரூ.50 ஆயிரத்திற்கு பெண் குழந்தை அபிஷாவை விற்றனர்.
பின்னர் அவர் மூலம் வெவ்வேறு புரோக்கர்கள் கைக்கு சென்ற குழந்தை தற்போது மதுரை அடுத்த திருமங்கலத்தில் தாஜூதின் மனைவி பரக்கத் நிஷா (25) என்பவரிடம் வளர்ந்து வருகிறது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீரவநல்லூர் திரும்பிய கணபதி, தனது குழந்தை குறித்து ரோஸ்லினிடம் கேட்டபோது யாரோ ஒரு பெண், குழந்தை அபிஷாவை திருடிச் சென்றதாகக் கூறினாராம். இதை ஏற்க மறுத்த கணபதி புகார் கொடுக்குமாறு கூறினார். அதன்பேரில் வீரவநல்லூர் காவல் நிலையம் சென்ற ரோஸ்லின் புகாரும் அளித்தார்.
ஆனால், அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார் உரிய முறையில் விசாரித்த போது பெற்ற குழந்தையை பணத்துக்கு விற்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்த இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமாரி சித்ரா இதில் தொடர்புடைய சேரன்மகாதேவியை சேர்ந்த சுரேஷ், பள்ளக்கால் பொதுக்குடியைச் சேர்ந்த குமார், வெள்ளாங்குளியைச் சேர்ந்த சாமிநாதன் மனைவி மூக்கம்மாள் (40), விகேபுரத்தை சேர்ந்த மரியபாக்கியசாமி மகன் கண்ணன் (38), திருமங்கலத்தைச் சேர்ந்த பரக்கத் நிஷா, ரோஸ்லின் ஆகிய 6 பேரை கைது செய்தார். மேலும் இதில் தொடர்புடையோர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.