11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
1 min read
11 MLAs remove eligibility case; Supreme Court order
8-7-2020
ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் ஆனுப்ப உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தகுதி நீக்க வழக்கு
ஜெயலலிதா மறைந்தபின்னர் தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் பதவியை ராஜினாமா செய்த பின்னர் புதிய முதல் அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்றார். அந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி சசிகலா அணியிலும், ஓ.பன்னீர் செல்வம் தனி அணியிலும் இருந்தனர்.
இந்த நிலையில் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற ஓட்டெடுப்பில், தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
அதன்பின் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் ஒரே ஆணியாக இணைந்து செயல்பட்டனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கைப் பொருத்தவரை அரசுக்கு எதிராக 11 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்திருந்தாலும் அவர்கள் அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்படவில்லை என்பதால் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை, என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்த மனுவின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
இந்த நிலையில், தி.மு.க. கொறடா சக்கரபாணி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று, தனது தரப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டு உள்ளது. மணிப்பூர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கும் இந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.
உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சபாநாயகர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?” என கேள்வி எழுப்பினர். இந்த விஷயத்தில் சபாநாயகர் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி சபாநாயகர் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.