அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு
1 min read
8.7.2020
Online class for government school studentsஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தமிழக முதல்வர் வருகிற 13ம் தேதி துவக்கி வைக்கிறார். 12ம் வகுப்பில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு வைக்கப்படும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள நம்பியூரில் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணியை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கையை ஏற்று 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டம் கடந்த ஆண்டு இருந்த நடைமுறையே பின்பற்றப்படும்.
வரும் 13ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அதற்குள் பாடபுத்தகங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்படும். புத்தகங்கள் வழங்கப்பட்ட பின்னர் ஆன்லைன் வகுப்பு தொடங்கப்படும். பாட புத்தகங்கள் கூரியர் மூலம் அனுப்பப்படவில்லை. நேரடியாக மாணவர்களுக்கு வழங்கப்படும்.
10ம் வகுப்பு மாணவர்களில் முழுமையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த பட்டியல் தயார்செய்த பின்னர் மதிப்பெண் வழங்கப்படும்.
இந்த ஆண்டு 34,482 மாணவர்கள் 12ம் வகுப்பு இறுதி தேர்வு எழுதவில்லை. அதில் 718 மாணவர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்ற மாணவர்களும் தேர்வு எழுதலாம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்வு முடிந்த 4 நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். நீட்தேர்வுக்கான பயிற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. அதில் 7100 மாணவர்களுக்கு முழு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.