சென்னையில் கொரோனாவுக்கு இன்று காலை 24 பேர் சாவு
1 min read
24 people killed by corona morning in Chennai
12-7-2020
சென்னையில் இன்று காலை மட்டும் கொரோனாவுக்கு 24 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இதன் தாக்கல் அதிகமாக உள்ளது. ஆனாலும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் 76 ஆயிரத்து 158 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 1,221 பேர் உயிரிழந்துள்ளனர்.
24 பேர் சாவு
இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் (காலை வரை) 24 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
இன்று இறந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7 பேரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
தமிழகம் தொடர்ந்து 2-வது இடம்
இந்தியாவில் ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக 20 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.
இன்று( ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 28,637 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 8,49,533 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5,34,620 பேர் குணமடைந்துள்ளனர். 2,92,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 22,674 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (சனிக்கிழமை) மட்டும் 2,80,151 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 2,46,600 பேரும், தமிழகத்தில் 1,34,226 பேரும், டெல்லியில் 1,10,921 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரொனா பாதிப்பில் தமிழகம் 2 -வது இடத்தில் உள்ளது.