அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா; தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்ய அமிதாப் வேண்டுகோள்
1 min read
Amitabh Bachchan, Abhishek Bachchan affected for corona
12-7-2020
அமிதாப்பச்சனுக்கும் அவரைத் தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படி அமிதாப்பச்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமிதாப்பச்சன்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு வயது 77. அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
.
இதுகுறித்து அபிஷேக்பச்சன் தனது டுவிட்டர் பதிவில், “எனது தந்தையும், நானும் கொரோனாவுக்கான பரிசோதனை செய்தோம். லேசான அறிகுறிகளைக் கொண்ட நாங்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். தேவையான அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். எங்கள் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அனைவரையும் பீதியடையாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பிரார்த்தனை
அமிதாப் பச்சன் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தகவலறிந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், மற்றும் விளையாட்டு பிரபலங்கள், அமிதாப்பை டுவிட்டரில் பின் தொடர்பவர்கள் , அமிதாப் ரசிகர்கள் அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக அமிதாப்பச்சன் டுவிட்டரில் பதிவேற்றியிருப்பதாவது:
–
எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. குடும்ப உறுப்பினர்கள், ஊழியர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.