சிவகங்கை அருகே 2 பெண்கள் கொலை -நகை, பணம் கொள்ளை
1 min read
14.7.2020
2 women killed near Sivagangai – jewelery, money robberyசிவகங்கை: காளையார்கோவில் அருகே 2 பெண்களை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியாகு. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி ராஜகுமாரி(60). இவர்களுக்கு ஸ்டீபன் மற்றும் ஜேம்ஸ்ராஜ் என 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இருவருமே ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.
ஸ்டீபன் மனைவி சினேகா(30), சென்னையில் வசித்து வந்தார். கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் தனது தலைப்பிரசவத்திற்காக காளையார்கோவில் அருகே கோட்டையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். 7 மாதங்களுக்கு முன்னர் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த மாதம் குழந்தையுடன் முடுக்கூரணி வந்த இவர் மாமனார் மற்றும் மாமியாருடன் வசித்து வந்தார்.
சந்தியாகுவின் மற்றொரு மகன் ேஜம்ஸ்ராஜ், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் காரைக்குடியில் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். எனவே கட்டுமானப் பணிகளை கவனிப்பதற்காக காரைக்குடி சென்றுள்ள அவர், அங்கேயே தங்கி விட்டார். முடுக்கூரணியில் உள்ள வீட்டில் சந்தியாகு, ராஜகுமாரி, சினேகா மற்றும் அவரது குழந்தை மட்டுமே இருந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு, சந்தியாகு எழுந்து தோட்டத்திற்கு சென்று விட்டார். கடலை பயிரிட்டுள்ளதால் தினமும் அதிகாலை அவர், தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்று விடுவது வழக்கம். இதனை நோட்டமிட்டு வந்த கொள்ளையர்கள், இன்று காலை அவர் தோட்டத்திற்கு புறப்பட்டு சென்றதும், முன்புற கதவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சந்தியாகுவின் மனைவி ராஜகுமாரி மற்றும் மருமகள் சரமாரியாக அரிவாளால் வெட்டி, ராஜகுமாரி அணிந்திருந்த ஒன்பதரை பவுன் தாலிச் செயின் மற்றும் சினேகா கழுத்தில், காதில் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டனர். தலை மற்றும் கழுத்தில் விழுந்த வெட்டுக் காயங்களால் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து வீட்டில் இந்த பீரோக்களையும் உடைத்த கொள்ளையர்கள், அதில் இருந்த நகைகள் மற்றும் பணத்தையும் எடுத்துக் கொண்டு, கதவை வெறுமனே சாத்தி விட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.
காலை 4 மணியளவில் சினேகாவின் குழந்தை தொடர்ந்து வீறிட்டு அழுது கொண்டிருந்தது. சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர், சந்தியாகுவின் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். மாமியார் மற்றும் மருமகள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அலறித் துடித்த அவர்கள், இது குறித்து சந்தியாகுவுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.
வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மருமகளின் உடல்களை கண்டு கதறிய சந்தியாகு, பின்னர் காளையார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக
ராமநாதபுரம் டிஎஸ்பி வருண்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. தடயவியல் நிபுணர்களும் கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தனர்.
இந்த இரட்டைக்கொலை குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடுகின்றனர். நகைக்காக வீடு புகுந்து 2 பெண்களை கொள்ளையர்கள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் காளையார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.