திருச்செந்தூரிலிருந்து இ.பாஸ் இல்லாமல் சென்னை செல்ல முயன்ற 3 பேர் கைது
1 min read
14.7.2020
3 arrested for trying to travel from Thiruchendur to Chennai without e-passதிருச்செந்தூரிலிருந்து இ.பாஸ் இல்லாமல் சென்னை செல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் இரவில் திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய போலீசார், முருகா மடம் சந்திப்பில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்ததில், திருமணத்திற்காக ஆந்திரா செல்வதாக போலி இ.பாஸ் வைத்துக்கொண்டு 5 பேரை சென்னைக்கு அழைத்துச் செல்ல முயன்றதும் இதற்காக ஒவ்வொருவரிடம் இருந்து தலா 3500 ரூபாய் பெற்றுக் கொண்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுனர் இடையன்விளை, தெற்கு தெருவைச் சேர்ந்த தேவசுந்தரம் மகன் மனோகர் யுவராஜா (37), காரின் உரிமையாளர் உடன்குடி சுல்தான்புரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற சந்திரன் (42), உடன்குடி சிறுநாடார் குடியிருப்பு, மேலத்தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுந்தரலிங்கம் (40) மற்றும் ஆந்திரா இ.பாஸ் பெற்று தந்த உடன்குடியைச் சேர்ந்த கணபதி மகன் ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் லாக் டவுன் கடுமையாக இருந்த போது சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்களை இவ்வாறு அனுப்பி வைத்திருந்தது தெரிய வருகிறது. விழிப்புடன் செயல்பட்ட திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.