சாத்தான்குளம் விவகாரம் -கைதான போலீசாரை 2 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி
1 min read
14.7.2020
Sathankulam affair: Arrested police allowed 2 days in CBI custodyசாத்தான்குளம் வியாபாரிகள் காெலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரை, 2 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க மதுரை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கோவில்பட்டி கிளைச்சிறையில் இறந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரித்தது.
இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரித்தார். இதனிடையே, வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், சிபிஐ விசாரணைக்கு தாமதமாகும் என்பதாலும், வழக்கு தொடர்பான ஆவண, ஆதாரங்களை பாதுகாக்கும்விதமாகவும் உடனடியாக வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து விசாரணையை துவக்கிய சிபிசிஐடி போலீசார் 2 கொலை வழக்குகளை பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐகள் ரகுகணேஷ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். சிபிஐ தரப்பிலும் போலீசார் மீது இரு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கூடுதல் எஸ்பி சுக்லா தலைமையிலான சிபிஐ குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முத்துராஜா மற்றும் முருகன் ஆகிய 5 பேரையும், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி, சிபிஐ தரப்பில் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஹேமானந்த்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக 5 பேரையும் சிபிஐ போலீசார் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி, ‘‘எதற்காக இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்துள்ளீர்கள்’’ என்றார்.
சிபிஐ கூடுதல் எஸ்பி சுக்லா ஆஜராகி, ‘‘இரு கொலை வழக்குகளை பதிவு செய்துள்ளோம். சிசிடிவி காட்சிகள், ஹார்ட் டிஸ்க், லத்தி உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம். அப்போதுதான் நடந்த சம்பவம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியும். விசாரணை முறையாக சென்று கொண்டிருக்கிறது. இவர்களிடம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தால்தான் விசாரணையை விரைந்து முடிக்க முடியும்’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி, ‘‘உங்கள் 5 பேரையும், 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளனர். இதில், உங்களுக்கு ஏதேனும் ஆட்ேசபம் உண்டா’’ என்றார்.
அப்போது 5 பேரும், ‘‘தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை’’ என்றனர். இதையடுத்து, ‘‘5 பேருக்கும் ஏதேனும் காயங்கள், பாதிப்பு இருக்கிறதா’’ என்றார் நீதிபதி. அனைவரும், ‘‘ஒன்றும் இல்லை’’ என்றனர்.
ஆனால் நீதிபதியோ, ‘‘காயங்கள் இல்லையென்பதை காட்டுங்கள்’’ என்றார். இதைத்தொடர்ந்து 5 பேரும் கை, கால், முதுகு மற்றும் மார்பு பகுதிகளை திறந்து காட்டினர்.
அப்போது நீதிபதி, ‘‘உங்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு உள்ளதா’’ என்றார். இதற்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ‘‘எனக்கு ஆபரேஷன் செய்து பிளேட் வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
‘‘இது எப்போது நடந்தது’’ என நீதிபதி கேட்டார்.
இதற்கு இன்ஸ்பெக்டர், ‘‘5 ஆண்டுக்கு முன்’’ என்றார். ‘‘அது இப்பாேதைக்கு தேவையில்லை’’ என நீதிபதி கூறினார்.
போலீசார், ‘‘சிபிஐ விசாரணையின்போது எங்கள் வக்கீல் உடனிருக்க அனுமதிக்க வேண்டும்’’ என்றனர். அதற்கு நீதிபதி, ‘‘விசாரணைக்கு இடையில் சந்திக்கலாம்’’ என்றனர்.
இவை அனைத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி பின்னர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 5 பேரையும் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்கலாம். 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு முன்னதாக மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும். நேரப்படி உணவு, இதர வசதி செய்து கொடுக்க வேண்டும். உளரீதியாகவோ, மனரீதியாகவோ எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. இப்போது எப்படி அழைத்துச் செல்கிறீர்களோ, அதுபோல அப்படியே மீண்டும் கொண்டு வந்து ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
விசாரணை தீவிரம்
சாத்தான்குளம் வழக்கில் கைதாகி, காவலில் எடுக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முத்துராஜா மற்றும் முருகன் ஆகிய 5 பேரும் மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் எஸ்பி சுக்லா தலைமையிலான சிபிஐ குழுவினர் நள்ளிரவு வரை தொடர் விசாரணை நடத்தினர். ஒவ்வொருவராக தனித்தனியாக வைத்து விசாரிக்கப்பட்டு, அவர்கள் தெரிவித்த தகவல்கள் அனைத்தையும் எழுதி பதிவு செய்தனர். மேலும், படங்கள், வீடியோ காட்சிகளைக் காட்டியும் அது குறித்து விசாரித்ததுடன், ஒருவரிடம் பெறப்பட்ட தகவலை வைத்தே, தொடர்புடைய மற்றவர் என பல்வேறு கேள்விகளைக் கேட்டு, முரண்பாடுகள் இருப்பின் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், சிபிஐ காவலுக்கு எடுக்கப்பட்ட 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வருவதற்கு 8 மணி நேரத்திற்கும் மேலாகும் என்பதால் பரிசோதனை முடிவு வந்த பின்பு, 15ம் தேதி காலை சாத்தான்குளம் அழைத்து செல்ல சிபிஐ போலீசார் முடிவெடுத்துள்ளனர்.