கொரோனாவில் இருந்து பாதுகாக்க முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து; அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
1 min read
PCG vaccine for the elderly to protect against corona;- heath Minister Vijayabaskar
15-7-2020
கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்க முதியவர்களுக்கு பி.சி.ஜி. தடுப்பு மருந்தை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிசிஜி தடுப்பு மருந்து
தமிழக அரசு கொரோனா நோய் தொற்றை தடுக்கவும் சிகிச்சைகள் அளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கோவிட்-19 நோய் தொற்று, முதியவர்கள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்த நோய், இருதயம் சார்ந்த நோய்கள் போன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் கடந்த 50 ஆண்டுகளாக பிசிஜி தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இது உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை (Innate Immunity) அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. பிசிஜி தடுப்பு மருந்தை 60 முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் நோய்வுற்ற விகிதமும் உயிரிழப்பு விகிதமும் (Morbidity & Mortality Rates) குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
முதியவர்களுக்கு…
மேற்கூறிய காரணங்களின் அடிப்படையிலும், இன்றளவில் கோவிட்-19 நோய் தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையிலும் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்தினை செலுத்தி அதன் செயல்திறனை ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தமிழ்நாடு அரசின் அனுமதியினை கோரியிருந்தது.
இதனை ஏற்று உடனடியாக உரிய அனுமதியை வழங்கி முதல்-அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த சோதனை முயற்சியை ICMR நிறுவனத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெகு விரைவில்
தொடங்கவுள்ளது.
பிசிஜி தடுப்பு மருந்தினை முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் கோவிட்-19 நோயின் தீவிரத் தன்மையை குறைக்கவும் மருத்துவமனையில் அனுமதியை தவிர்க்கவும் உயிரிழப்பை குறைக்கவும் பேருதவியாக அமையும்.
இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் தொடர் பணிகள் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.