கைதான இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரின் நீதிமன்ற காவல் 30ம் தேதி வரை நீட்டிப்பு
1 min read
16.7.2020
Extension of court custody of inspectors till 30th
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரின் நீதிமன்ற காவல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால் அனைவரும் மதுரை சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை குறித்து ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. இவ்வழக்கை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியது. ஆனால், சிபிஐ விசாரணைக்கு தாமதமாகும் என்பதாலும், வழக்கு தொடர்பான ஆவண, ஆதாரங்களை பாதுகாக்கும்விதமாகவும் உடனடியாக வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து விசாரணையை துவக்கிய சிபிசிஐடி போலீசார் 2 கொலை வழக்குகளை பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐகள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இதேபோல், வழக்கை விசாரித்த சிபிஐயும் இரு கொலை வழக்குகள் பதிவு ெசய்தது. கூடுதல் எஸ்பி சுக்லா தலைமையிலான சிபிஐ குழுவினர் விசாரிக்கின்றனர்.
இவ்வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையிலுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முத்துராஜா மற்றும் முருகன் ஆகிய 5 பேரையும், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி 2 நாள் மட்டும் விசாரிக்க அனுமதித்து, 16ம் தேதி மாலை 5.30 மணிக்குள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவையடுத்து 5 பேரையும் சிபிஐ போலீசார் உடனடியாக தங்கள் காவலுக்கு எடுத்தனர். மதுரையிலுள்ள சிபிஐ அலுவலகம் மற்றும் சம்பவம் நடந்த சாத்தான்குளம் காவல்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச்சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பதிவு செய்தனர்.
இதையடுத்து 16ம் தேதி மாலை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமானந்த குமார் முன் 5 பேரையும் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி, ‘‘சிபிஐ போலீசார் விசாரணையின் போது உங்களை தொந்தரவு செய்தார்களா’’ என கேட்டார். இதற்கு 5 பேரும் இல்லை என்றனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ‘‘எனக்கு 4 ஆண்டுக்கு முன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அதிக வலியும், தொந்தரவும் உள்ளது. கழிப்பறை செல்வதில் மிகுந்த சிரமம் உள்ளது’’ என்றார். இதுகுறித்து சிறையிலுள்ள டாக்டர்கள் பரிசோதித்து உரிய சிகிச்சை அளிப்பர் என்றார் நீதிபதி.
இதையடுத்து 5 பேரின் நீதிமன்ற காவலையும் நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி ஹேமானந்த குமார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் முருகன் ஆகியோரை வரும் 30ம் தேதி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், காவலர் முத்துராஜாவை இன்று வரை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அனைவரும் மதுரை மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர். முன்னதாக அனைவருக்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.