புளியங்குடியில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற் பாெறியாளர் கைது
1 min read
17.7.2020
Assistant Engineer arrested for accepting bribe of Rs. 20,000 in Puliyangudiபுளியங்குடியில் கூடுதல் திறன் கொண்ட மின் இணைப்பை வழங்குவதற்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வின் ராஜ்குமார் (52) தாரமங்கலத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு புன்னையாபுரம் பகுதியில் விதைப்பண்ணை உள்ளது. இங்கு ஏற்கனவே 10 கிலோவாட் அளவுக்கு மின்திறன் உள்ள நிலையில் விதைப் பண்ணையை விரிவாக்கம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார். இதற்காக கூடுதல் மின் திறன் கொண்ட 55 கிலோவாட் மின் இணைப்பு வழங்குமாறு புளியங்குடி மின் வாரிய உதவி செயற்பொறியாளரிடம் கடந்த 25.4.2020 அன்று விண்ணப்பம் செய்தார். இதைத்தொடர்ந்து அரசு விதிமுறைகளின்படி செலுத்த வேண்டிய தொகையையும் ஜூன் 1ம் தேதி அவர் செலுத்தியுள்ளார்.
ஆனால் கூடுதல் திறன் கொண்ட மின் இணைப்பை வழங்க வேண்டுமென்றால் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டுமென புளியங்குடி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வின் ராஜ்குமார் நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறிய ஆலோசனையின்படி நேற்று செல்வின் ராஜ்குமார், புளியங்குடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த உதவி செயற்பொறியாளர் கருப்பசாமியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மெக்லெரின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உதவி செயற்பொறியாளர் கருப்பசாமியை கையும், களவுமாக கைது செய்து அவரிடமிருந்த லஞ்ச பணத்தை கைப்பற்றினார். இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.