“கறுப்பர் கூட்டம்” அலுவலகம் சீல் வைப்பு
1 min read
"Kuppar Koottam" Office Sealed
18-7-2020
சென்னையில் கறுப்பர் கூட்டம் அமைப்பின் அலுவலகத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.
கறுப்பர் கூட்டம்
கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூ டியூப் சேனலை சிலர் நடத்தி வருகிறார்கள். இதில் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். சமீபத்தில் கந்த சஷ்டி கவசத்தை மிகவும் கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டன்.
இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் வெளிவந்தன. இதை அடுத்து இந்த அமைப்பில் தொடர்புடைய செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதன்பின் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுரேந்தர் என்பவர் புதுச்சேரியில் சரணடைந்தார்.
சீல் வைப்பு
செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு சென்னை டி. நகரில் ஒரு அலுவலகம் உள்ளது. அங்குதான் வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோ வைத்துள்ளனர். அந்த அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்தனர்.
அதில் ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். மேலும், நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏ.டி.எஸ்.பி. மற்றும் உதவி கமிஷனர் தலைமையில் அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்துச் சென்றனர். தற்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஒரு போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர கருப்பர் கூட்டத்திற்கு சொந்தமான பிரிண்டிங் பிரசுக்கும் சீல் வைக்கப்பட்டது.