காமராஜருக்கும் சிவாஜிக்கும் இடையே சங்கிலி தொடர் பந்தம்
1 min read
Chain series bond between Kamarajer and Shivaji Ganesan
21-7-2020
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தந்தை சின்னையா மன்றாயர் ஒரு காங்கிரஸ் தியாகி. ஆனாலும் சிவாஜிகணேசன் மக்கள் மத்தியில் அறிமுகமாகும்போது அவர் திராவிட முன்னேற்றக்கழக விசுவாசி. அவரிடம் தேசிய உணர்வு மிஞ்சி இருக்கும்போது காலம் எப்படி அவரை அந்தக் கட்சியில் இருக்கவிடும். யாரோ செய்த சதி அவரை சேர வேண்டிய இடத்தில் சேர்த்தது.
தன்னலமற்ற ஒரு தலைவருக்கு தொண்டராக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் இந்த தன்னலமற்ற தொண்டர்.
பெருந்தலைவர் காமராஜருக்கு எத்தனையோ விசுவாசிகள் உண்டு. ஆனால் அவருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் தொடர்பு ஒரு சங்கிலித் தொடர் பந்தமாகும்.
சேவை என்ற ஒரே கொள்கையில் வாழ்ந்தவர் காமராஜர். அதேபோல் நடிப்பு என்ற ஒரே தாக்கத்தில் வாழ்ந்தவர் சிவாஜி கணேசன். அவர் பணத்திற்காக நடிக்க வரவில்லை. அப்படி என்றால்… நாட்டுக்காக நன்கொடைகளை அள்ளி கொடுத்திருக்க மாட்டார். முதல்படம் பராசக்தி வெளியாகும்போது அவர் பரம ஏழைதான். ஆனாலும் அப்போது இலங்கை சென்று நாடகம் நடத்தி அந்த பணம் முழுவதையும் நன்கொடையாக கொடுத்தவர்தானே.
பெண் சுகத்திற்காக நடிக்க வரவில்லை. அப்படி அவர் நினைத்திருந்தால் எத்தனையோ நடிகையரை பேரை திருமணம் செய்திருக்கலாம். சினிமா உலகில் அதெல்லாம் சகஜம் என்றுதான் ரசிகர்கள் சொல்லி இருப்பார்கள்.
புகழுக்காக நடிக்கவில்லை. அப்படி அவர் நினைத்திருந்தால் அவர் செய்த சேவைகளை அவரே பத்திரிகைகளுக்கு கொடுத்து செய்தியாக வரச் செய்திருப்பார்கள். நான் ஒரு பிரபல பத்திரிகையில் பணியாற்றிவன் என்ற முறையில் சொல்கிறேன்… ஒரு நாள் கூட சிவாஜி கணேசன் அலுவலகத்தில் இருந்துகூட இந்த செய்தியை போடுங்கள்… இந்த செய்தியை அப்படி போடுங்கள் என்று சொன்னதில்லை. அவர் கொடுத்த நன்கொடைகள் எல்லாம் அவர் மறைந்த பிறகுதானே வெளியே தெரிய வருகிறது.
இப்போது சற்று சிந்தித்துப்பாருங்கள் பொதுவாழ்வில் பெருந்தலைவரைப் போலத்தானே தன்னலமற்று சிவாஜி கணேசன் வாழ்ந்திருக்கிறார்.
சங்கிலி தொடர் பந்தம்
காமராஜரும் சிவாஜி கணேசனும் வாழ்விலும் மரணத்திலும் ஏதோ ஒரு வகையில் பின்னி பிணைந்திருக்கிறார்கள்.
காந்தி பிறந்தநாள் அன்று காமராஜர் நினைவு நாள். காமராஜர் பிறந்த நாளையொட்டியே சிவாஜியின் நினைவு நாள் வருகிறது. கடந்த (ஜூலை) 15-ந் தேதி காமராஜர் பிறந்தநாள். இன்று 21-ந் தேதி சிவாஜி கணேசன் நினைவு நாள்.
அதேபோல் காமராஜரின் நினைவு நாளையொட்டியே சிவாஜியின் பிறந்தநாள். அக்டோபர் 1-ந்தேதி சிவாஜிகணேசன் பிறந்தநாள். மறுநாள் 2-ந் தேதி காமராஜர் நினைவு நாள்.
ஒன்றின் இறுதி மற்றதன் தொடக்கம்தான் சங்கிலித் தொடர். அந்தப் பந்தம் காமராஜருக்கும் நடிகர் திலகத்துக்கும் இருக்கிறது.
இந்த இருவருக்கும் தான் மறைவுக்குப் பிறகு புகழ் பெருகிக்கொண்டே இருக்கிறது.
பெருந்தலைவரின் புகழை சிவாஜி போல் பறைசாற்றியது யாரும் இல்லை. காமராஜர் புகழ் பாடும்போது சிவாஜியை நினைவுகூராமல் இருந்தால் அந்த புகழ் பாட்டு முழுமை பெறாது. எந்தவித பலனையும் எதிர்பாராமல் காமராஜரின் பெயரை ஏராளமான படங்களில் உச்சரித்தவர் சிவாஜி.
காமராஜரும் தான் செய்ததை சொல்லிகாட்டியவர் அல்ல. சிவாஜியும் தான் அள்ளி கொடுத்ததை வெளியே சொல்ல வில்லை. அவர்கள் மறைவுக்குப் பிறகு தான் அவர்களின் சேவையும் கொடையும் வெளிவந்த வண்ணம் உள்ளது.
காமராஜரை பொறுத்தவரை அவர் செய்ததை பறைசாற்றியது கிடையாது. சிவாஜி வலது கை கொடுப்பதை இடதுகை அறியாது என்பதை விட கொடுத்ததை வலது கையே மறந்துவிடும் தன்மை கொண்டவர் சிவாஜி. இந்த இருவரும் மறைந்த பிறகு அவர்கள் செய்த சேவைகள் ஒவ்வொன்றாக தெரிய வருகிறது. நமக்கு தெரியவந்தவையே நம்மை மலைக்க வைக்கிறது. வெளிவராமல் எத்தனை சேவைகள் மறைந்து போனதோ.
தன்னலமற்ற இவர்களின் சேவைகளை போற்றுவோம்.
வாழுகிறார் சிவாஜி கணேசன்
இன்று சிவாஜி கணேசன் நினைவுநாள்… ஆனால் அவர் அமரர் ஆகிவிட்டார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. வாழுகிறார் சிவாஜி…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பல படங்கள் ட மறுவெளியீடாக டிஜிட்டலில் வெளிவந்துள்ளன. அத்தனை படங்கும் புதுப்படங்களுடன் போட்டியிட்டு வெற்றிவாகை சூடுகிறது.
தற்போது கொரோனா ஊரங்கு காரணமாக டெலிவிஷனில் புது நிகழ்ச்சிகள், தொடர்கள் ஒளிபரப்ப முடியவில்லை. இதனால் சினிமாப் படங்களைத்தான் காட்டுகிறார்கள். இதில் மிக மிக அதிக அளவில் சிவாஜி கணசேன் படங்கள்தான் ஒளிபரப்பாகின்றன. பொதுமக்களும் விரும்பி பார்க்கிறார்கள்.
எனவே ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மனதிலும் சிவாஜி கணேசன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இளைய தலைமுறைகளின் மனதிலும் அவர் குடிகொண்டுள்ளார்.
. எப்படி பெருந்தலைவர் காமராஜர் மறைவுக்குப் பின்னர் கூட பொது மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறாரோ அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தமிழர்களின் நெஞ்சில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
-கடையம் பாலன்