மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா தொடங்கியது
1 min read
Mulaikottu thiruvila began at madura meenachi temple
22-7-2020
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆனால் இந்த விழா எதிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாதந்தோறும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா, ஆவணி மூலத்திருவிழா, ஆடி முளைக்கொட்டு திருவிழா ஆகியவை பெயர் பெற்றது. தற்போது கொரோனா ஊரடங்கால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை.
சித்திரை திருவிழாவின்போத நடைபெறும் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இணைய தளத்தில் அதைக் காண ஏற்பாடு செய்தனர்.
ஆடி முளைக்கொட்டு திருவிழா
அதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டு உற்சவ விழா நேற்று (செவ்வாய்க்கிழமை) பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மீனாட்சி அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் காலை 10.50 மணிக்கு சிவகுமார் என்ற வேலாயுதபட்டர் கொடியை ஏற்றினார்.
அங்கு எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
பிரகாரத்தில்…
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் மீனாட்சி அம்மன் பஞ்சமூர்த்திகளுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் பல்வேறு வாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ஆனால் தற்போது அம்மன் ஆடி வீதியில் வலம் வருவதற்கு பதிலாக சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் காலை, மாலை என இரு வேளையும் வலம்வருகிறார்.
ஆடிப்பூரம் தினத்தன்று (24-ந் தேதி) காலை 10 மணிக்கு மீனாட்சி அம்மன் சன்னதி மகாமண்டபம் பள்ளியறை முன்பு அம்மனுக்கு ஏற்றி இறங்குதல் வைபவம் நடக்கிறது.