சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா ரத்து
1 min read
22.7.2020
Sankarankoil Aadithabasu festival canceledதென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் சிவபெருமான் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில், தவமிருந்த கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் சிறப்பு வாய்ந்தது. இந்த காட்சியை காண மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும். பிற மாநிலங்களில் இருந்தும். வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். 12 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் அம்பாள் காலையிலும், மாலையிலும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 9ம் திருநாள் அன்று கோமதி அம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சியும், 11ம் நாள் அன்று தவக்கோலத்தில் இருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் மாலையில் சங்கரநாராயணராகவும், இரவில் சங்கர லிங்கமாகவும் காட்சி தரும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும்.
தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், தொற்று பரவாமல் இருக்க வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதாலும் நாளை (23ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்க வேண்டிய சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திரு விழா ரத்து செய்யப்படுவதாகவும், முக்கிய நிகழ்ச்சியான தபசு காட்சி ஆக.2ம் தேதி நடைபெறாது எனவும் கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நாளை (23ம்தேதி) காலை கோயிலுக்குள் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாரதனை நடைபெறும். மாலை பூஜைகளுக்கு மண்டகப்படிதாரர்கள் அபிஷேக பொருட்கள் மற்றும் பூஜைப் பொருட்களை வழங்கினால் அதன் மூலம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடத்தப்படும் என்று கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூஜை நேரங்களில் கோயில் பட்டர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளாக பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்படுவது பக்தர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.