தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா26-ந் தேதி தொடங்குகிறது; பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
1 min read
Thoothukudi Panimaya Mata Peralaya Festival begins on the 26th; Not allowed to the public
23-7-2020
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆனால் பொதுமக்கள் விழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்
பனிமய மாதா
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இங்கு ஆண்டு தோறும் 12 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழாவில் சாதி, மத பேதமின்றி அனைவரும் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் அனைவருக்கு இருந்தது. ஆனால் திருவிழா நடைபெறும் என்றும் ஆனால் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இத தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கத்தோலிக்க ஆயர் ஸ்டீபன் ஆகியோ் இன்று( வியாழக்கிழமை) நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். . அப்போது ஆயர் ஸ்டீபன் கூறியதாவது:-
பனிமய மாதாவின் பெருவிழா கடந்த 438 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா வருகிற 26-ந் தேதி தொடங்கி, ஆகஸ்டு 5-ந் தேதி நிறைவு பெறுகிறது.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் யாரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு விழாவில் கொடிபவனி, திருவிருந்து விழா, நற்கருனை பவனி ஆகியவை நடைபெறாது.
தொலைக்காட்சி
ஆகஸ்டு 5-ந் தேதி நடைபெறும் பெருவிழா அன்று தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன், பாளையங்கோட்டை ஆயர் அந்தோணிசாமி, பணி நிறைவு பெற்ற ஆயர் ஜூடு பால்ராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தினமும் காலை 5.30, 6.30, 7.30, 8.30 மணிக்கு திருப்பலி நடைபெறும். திருவிழா நிகழ்வுகள் தொலைக்காட்சி, மற்றும் யூடியூப் சானலில் நேரலையாக ஒளிபரப்பப்படும். கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுபடவும், தூத்துக்குடி நகரில் ஏற்படும் சிக்கல்கள் களையப்படவும் இந்த ஆண்டு இறைமக்கள் தங்களது இல்லங்களில் இருந்தே அன்னையிடம் மன்றாடி இறையாசி பெற வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறும்போது, “வரும் ஆகஸ்டு மாதம் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பனிமய மாதா ஆலய திருவிழாவில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்” என்றார்.
ஆலோசனைக் கூட்டம்
முன்னதாக திருவிழா தொடர்பான அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது. இதில், ஆயர் ஸ்டீபன், ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா, தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வருகிற 26-ந் தேதி திருவிழா தொடங்க உள்ள நிலையில், பனிமய மாதா ஆலயத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் அப்பகுதியைச் சுற்றி பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 800 போலீசார் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.