கடையம் அருகே விவசாயி உயிரிழந்த சம்பவம் : வனச்சரகர் இட மாற்றம்
1 min read
Farmer killed near Kadayam: Forester relocated
26-7-2020
கடையம் அருகே மின்சார வேலி அமைத்த விவசாயி இறந்த சம்பவத்தை அடுத்து வனச்சரகர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
விவசாயி சாவு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72), விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள வயலில் கடலை மற்றும் கத்தரி பயிர் செய்துள்ளார். இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் அங்கு வந்து பயிர்களை நாசம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அணைக்கரை முத்து வயலை சுற்றி மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வனத்துறையினர் 5 பேர் ஜீப்பில் அணைக்கரை முத்து வீட்டுக்கு வந்தனர். அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதனை அறிந்ததும் அவரது மகன் நடராஜன் மற்றும் உறவினரும் சேர்ந்து சிவசைலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
சாவு
சிவசைலம் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது எதிரே வனத்துறை அலுவலர்கள் ஜீப்பில் அணைக்கரை முத்துவை அழைத்து வந்தனர். இதுபற்றி அணைக்கரை முத்துவின் மகன் நடராஜன் விசாரித்தார். அப்போது அணைக்கரை முத்துவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார்களாம்.
இதையடுத்து அவரை கடையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். அங்கு டாக்டர் பரிசோதித்தபோது, அணைக்கரை முத்து இறந்து விட்டதாக தெரிவித்தார்.
போராட்டம்
இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது.
அணைக்கரை முத்துவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு சென்று ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை அறிந்து பூங்கோதை எம்.எல்.ஏ., தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் ஆகியோரும் வந்தனர்.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கோகுலகிருஷ்ணன், இளங்கோவன், பாலாஜி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ரகுராஜன், ஆடிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசில் நடராஜன் புகார் செய்தார். அதன்பேரில் வனத்துறையினர் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அணைக்கரை முத்து உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது பிரேத பரிசோதனை அறை முன்பு உறவினர்கள் திரண்டனர். மேலும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ்மள்ளர், மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜசோழன் உள்ளிட்ட நிர்வாகிகளும் திரண்டனர்.
மாலை 3 மணி அளவில் அம்பை மாஜிஸ்திரேட்டு கார்த்திகேயன் அங்கு வந்தார். அவர், அணைக்கரை முத்துவின் மனைவி பாலம்மாள், மகன் நடராஜன், மகள்கள் வசந்தி, மாரியம்மாள், மருமகன் ஆறுமுகம் ஆகிய 5 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அவர்களுடைய வாக்குமூலங்களை பதிவு செய்தார்.
தொடர்ந்து உறவினர்களும், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், “சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும். விவசாயியை இழந்த குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்“ என்று கூறினர்.
ரூ.10 லட்சம் உதவி
இதற்கடையே அணைக்கரை முத்து குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் அளிக்கும்படி இன்று உத்தரவிட்டுள்ளார்.
இடமாற்றம்
இந்த நிலையில் அணைக்கரைமுத்து உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய வனச்சரகரை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து தலைமை வனக்காப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.