கொரோனா ஊரடங்கால் வீடு தேடிச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியை
1 min read
Corona curfew home search teacher
2-8-2020
கொரோனா ஊடரங்கு காரணமாக ஆசிரியை எழிலரசி என்பவர் வீடு தேடிச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்.
பாடம் நடத்தும் ஆசிரியை
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. சில தனியார் கல்லூரிகள், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் பாடம் நடத்துகிறார்கள்.
ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு அப்படி நடத்த முடியவில்லை. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பலர் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். சிலர் மட்டும் நிர்வாகப் பணிக்காக அவ்வப்போது பள்ளிக்கூடம் சென்று வருகிறார்கள்.
ஆசிரியை எழிலரசி
இந்த நேரத்தில் அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று பாடம் நடத்துகிறார் ஆசிரியை எழிலரசி.
பூந்தமல்லியை சேர்ந்த இவர், ஊரடங்கால் அரசு பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதியும், வேலை பார்க்காமல் வீட்டில் இருந்தபடி சம்பளம் வாங்க விரும்பாலும்தான் பணிபுரியும் அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களது வீட்டின் அருகே ஒரு இடத்தில் மாணவர்களை அமர வைத்து தினமும் 2 மணிநேரம் பாடம் நடத்தி அசத்துகிறார்.
முக கவசம்
பள்ளியில் பாடம் எடுப்பது போல மாணவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்து சமூக இடைவெளியோடு அமரச் செய்கிறார். அவர்களுக்கு முககவசம் அணிவித்துவிடுகிறார். கைகளை சுத்தம் செய்ய வைக்கிறார்.
பின்னர் இறை வணக்கத்துடனும் பாடம் நடத்துகிறார். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பாடப்பிரிவுகள் மட்டுமே எடுத்து விட்டு, அதில் இருந்து அவர்களுக்கு வீட்டுப்பாடமும் கொடுக்கிறார்.
பாராட்டு
மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர்களுக்கு வேண்டிய பிஸ்கட், மிக்சர் உள்ளிட்ட சிற்றுண்டிகளையும் ஆசிரியை எழிலரசி, கையோடு எடுத்து வந்து வகுப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கிறார். இதனால் மாணவர்களும் அவரிடம் உற்சாகமாக படித்து வருகின்றனர்.
வாரத்தில் 5 நாட்கள் வகுப்பு நடக்கிறது. அரசு பள்ளி ஆசிரியையின் இந்த செயலை மாணவர்களின் பெற்றோர் மட்டுமின்றி அந்த பகுதி பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மன உறுத்தல்
இதுபற்றி ஆசிரியை எழிலரசி கூறியதாவது:-
ஊரடங்கால் 4 மாதங்களாக படிக்காமல் இருக்கும் மாணவர்கள் இனிவரும் நாட்களிலும் தொடர்ந்து பாடம் நடத்தாவிட்டால் படிக்கும் திறனை இழப்பார்கள். விடுபட்ட பாடங்களை படித்தால் அடுத்த வகுப்புக்கு செல்லும்போது எளிமையாக இருக்கும்.
நான் தமிழ், ஆங்கிலம், கணிதம் மூன்று பாடங்களையே எடுக்கிறேன். இந்த மூன்று பாடங்களை படித்தாலே ஓரளவு மாணவர்களை தேர்த்தி விடலாம்.
கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வேலை செய்யாமல் சம்பளம் வாங்கியது என் மனதை உறுத்தியது. இதனால் மாணவர்களின் நலன் கருதி தற்போது ஆங்காங்கே மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களது பெற்றோர் கொடுக்கும் இடத்தில் வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறேன்.
இவ்வாறு ஆசிரியை எழிலரசி கூறினார்.
உதவி
இதே போல் பல ஆசிரியர்-ஆசியைகள் ஏதாவது ஒரு வகையில் உதவி வருகிறார்கள். சிலர் அக்கம் பக்கத்தில் உள்ள ஏழைகளுக்கு பொருளுதவி செய்கிறார்கள்.
சேலத்தில் ஆசிரியை லட்சுமி 6 ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் கல்வி செலவை ஏற்று கொண்டுள்ளார்.