பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு புகார்; விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு
1 min read
Accumulation of assets complaint against beela Rajesh; Order of the Central Government to conduct an inquiry
3-8-2020
முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மீது சொத்துக்குவிப்பு புகார் கூறப்பட்டு உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது
பீலா ராஜேஷ்
தமிழகத்தில் கொரோனா பரவி வரும்
போது சுகாதாரத்துறை செயலாளாராக இருந்தவர் பீலா ராஜேஷ். இவர் கொரோனா பரவல் பற்றியும் அரசு எடுத்துவரும் நடவடிக்கை பற்றியும் விளக்கமாக நிருபர்களுக்கு பேட்டி அளிப்பார். இதனால் அவரது பெயர் சாதாரண மக்களுக்கும் தெரிய ஆரம்பித்தது. டி.வி. பார்க்கும் பெண்களையும் அவர் கவர தவறவில்லை. அவர் எப்போது பேட்டி கொடுக்க வருவார் என்று மாலையில் டி.வி.யை பலர் கண்காணிக்க தொடங்கினார்கள்.
இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வணிக வரித்துறைச் செயலாளராக அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இருந்த ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
புகார்
இந்த நிலையில், பீலா ராஜேஷ் மீது சொத்துக்குவிப்பு புகார்கள் எழுப்பப்பட்டு, மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டு உள்ளது. பீலா ராஜேஷ் தனது வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து குவித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதன் தொடர்ச்சியாக, பீலா ராஜேஷ் மீதான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய அரசின் பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அவர் மீதான புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தமிழக தலைமைச்செயலாளர் சண்முகத்துக்கு மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.