ஊரடங்கு நீட்டிப்பும் பொதுமக்கள் ஆதங்கமும்
1 min read
Curfew extension and public access
2-8-2020
கொரோனா ஊரடங்கு சாதாரண மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதற்கு தொழில் முடக்கம்தான் காரணம். ரேஷன் கடை மூலம் இலவச அரசி, பருப்பு கொடுத்தாலும் அவர்களின் அத்தியாவசிய தேவை பூர்த்தியாகவில்லை. ஜூன் மாதத்தோடு ஊரடங்கு முடிந்துவிடும் என்று பெரும்பாலான மக்கள் நினைத்து இருந்தனர். ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது அவர்களை பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
ஊரடங்கு எதற்கு என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களின் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.
ஊரடங்கை இத்தனை காலம் நீடித்தாலும் கொரோனா குறையவில்லை. அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதேநேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகி வருவதும் ஆறுதல்தான்.
தளர்வுகள்
மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அந்த தளர்வு போதுமானதாக இல்லை என்பதுதான் பொது மக்களின் கருத்து. கடைகள் எல்லாம் 6 மணி வரை திறந்திருக்கலாம் என்பதை 7 மணி என்று மாற்றி இருக்கிறார்கள். அவ்வளவுதான். இதனால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் கூட வாய்ப்பு இல்லை.
மதுக்கடைகளை திறப்பதன் மூலம் மாநிலத்திற்கு வருவாய் பெருகும் என்று அரசு கருதுகிறது. தபால் நிலையம், வங்கிகள் திறப்பதன் மூலம் பண சுழற்சி இருக்கும் என்று அரசு நினைக்கிறது.
ஆனால் சாதராண மக்களிடம் எப்படி பணப்புழக்கம் இருக்கும் என்பதை அரசு நினைத்துப் பார்க்க வில்லை என்பதுதான்பொதுமக்களின் கேள்வி.
தொழில் தொடங்க பல்வேறு வகைகளில் கடன் கொடுப்பதாக மத்திய, மாநில அரசுகள் அறிவத்துள்ளன. அந்த கடன் எத்தனை பேருக்கு கிடைக்கும் என்பது தெரியாது. சரி கடன் கிடைத்தாலும் அதைக் கொண்டு தொழில் நடத்த முடியாதபடி ஊரடங்கு தடுக்கிறது.
அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்கள் எல்லாம் 75 சதவீத பணியாளர்களுடன் நடத்தலாம் என்று அரசு கூறியுள்ளதே என்று சொல்லலாம்.
ஆனால் அந்த நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் எப்படி செல்வார்கள்? அனைவரிடமும் கார், மோட்டார் சைக்கள் இருக்கிறதா என்ன? அப்படியே இருந்தாலும் 50 கிலோ மீட்டர் தூரம் பணிக்கு சென்று வர அவர்களால் முடியுமா?
அரசு ஊழியர்கள் கூட தினமும் பணிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அப்படி இருக்கையில் தனியார் நிறுவன ஊழியர்கள் எப்படி பணிக்கு செல்ல முடியும். இன்னும் சொல்லப்போனால் ஒன்றிரண்டு தொழிலாளர்களை கொண்டு இயங்கும் தொழில்கள் பல உள்ளன. அங்கு வேலை பார்ப்பவர்கள் கூலித் தொழிலாளர்கள். அவர்களால் எப்படி பணிக்குவர முடியும். இப்படி வேலைக்கு செல்ல முடியாத நிலையில் பல தொழிலாளர்கள் உள்ளனர்.
வேலை இழப்பு
இந்த நிலையில் பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி பலரை வேலைக்கு வரவேண்டாம் என்று பகிரங்கமாகவே அறிவித்துவிட்டது. அவர்கள் பாடு என்ன?
இவை அனைத்திற்கும் ஒரு அரசானது உடனடியாக தீர்வு கண்டிட முடியாது. ஆனால் ஆக்கபூர்வமாக தொழில்கள் தொடங்க வழிவகை காணலாம்.
தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவர போக்கு வரத்து வசதியை செய்து கொடுக்க வேண்டும். வேலைக்கு வரவேண்டாம் என்று ஆட்களை நிறுத்திய தொழிற்சாலையுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தி அந்த தொழில் தொடர்ந்து இயங்க என்ன செய்ய வேண்டும் என்று ஆராய வேண்டும். இப்படி பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் ஓரளவு குறைந்த பட்ச சம்பளமாவது கிடைக்க வழிவகை செய்யலாம்.
மிக அதிகமாக சம்பவளம் பெறுவோரின் சம்பளத்தை சற்று குறைத்துக் கொண்டாலும் சாதாரண தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்கு போகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தொழில்கள் அனைத்தும் தடையின்றி இயங்கினால்தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். சாதாரண மக்களின் வயிறும் நிறம்பும்.
போக்குவரத்து
சரி… போக்குவரத்தை திறந்துவிட்டால் கொரோனா மேலும் பரவாதா என்று கேட்கத் தோன்றும்.
இதில்தான் அரசு கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டும். ஒரே நேரத்தில் எல்லா நிறுவனங்களையும் திறக்க வைக்க கூடாது. காலை 6 மணிக்கே கூட சில நிறுவனங்களை இயங்க அனுமதிக்க வேண்டும். பஸ், ரெயில்களில் கூட்ட நெரிசல் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரின் வெப்ப நிலையை பரிசோதித்தே பஸ், ரெயில்களில் பயணிகளை ஏற்ற வேண்டும். தினமும் டிக்கெட் கொடுக்கும் நிலை இல்லாமல் பாஸ் முறை கொண்டு வரவேண்டும். வேலைக்குச் செல்வோர் பாஸ் வாங்கிக் கொண்டால் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்ய அனுமதி கொடுத்துவிடலாம்.
சென்னையை பொறுத்தவரை மின்சார ரெயில் போக்குவரத்து கண்டிப்பாக தேவை. முடிந்த அளவு எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். டிக்கெட் எடுத்தவர்களை மட்டுமே ரெயில் நிலையத்துக்குள்ளே அனுமதிக்க வேண்டும். அப்போதே அவர்களுக்கு வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும்.
இ-பாஸ்
அதேபோல் இ-பாசிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக மாவட்ட எல்லைப்பகுதியில் வசிப்பவர்கள் இ-பாஸ் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களால் இ-பாசை எளிதாக பெற முடியவில்லை. இதனால் பலர் முறைகேடான ஒரு மாவட்டத்தைவிட்டு இன்னொரு மாவட்டத்திற்கு சென்று விடுகிறார்கள். மேலும் சிலர் போலிய இ-பாஸ் மூலம் சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசு இ-பாஸ் தேவையில்லை என்று அறிவித்துள்ள நிலையில் தமிழகத்திற்கும் இ-பாஸ் தேவை இல்லாத நிலையை கொண்டு வரவேண்டும்.
அதேநேரம் எல்லா அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியை கடை பிடிக்க வழிவகை செய்ய வேண்டும். அங்கு வேலை செய்வோருக்கு கொரோனா டெஸ்ட் அடிக்கடி எடுக்க வேண்டும்.
இப்படி எல்லாத் தொழிலும் இயங்கினால்தான் தனிநபர் வருமானமும் பெருகும். அரசுக்கும் வருமானம் கிடைக்கும்.
தற்போது வளர்ச்சித் திட்டப்பணிகளை சில காலம் ஒத்தி வபை்பதில் கூட தவறு இல்லை.ஆனால் மக்களின் வளர்ச்சியில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
-கடையம் பாலன்.