இந்தி நடிகர்சுஷாந்த் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பீகார் முதல்-மந்திரி பரிந்துரை
1 min read
CBI files case against Hindi actor Sushant Bihar Chief Minister recommended to inquire
5-8-2020
இந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை வழக்கை, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் பரிந்துரை செய்து உள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலை
இந்தி நடிகர் சுஷாந்த் சிங்(வயது 34) கடந்த ஜூன் மாதம், மராட்டிய மாநிலம், மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
தற்கொலை செய்த சுஷாந்த் சிங் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக உள்ளார். அவரது கட்சியும் பாரதீய ஜனதாவும் கூட்டணி ஆட்சி அங்கு நடந்து வருகிறது.
காதலிக்கு தொடர்பு?
சுஷாந்த் சிங்கின் மரணத்தில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு உள்ளதாக, பீகார் போலீசில் சுஷாந்தின் தந்தை புகார் அளித்திருந்தார். இதையடுத்து, பீகார் தனிப்படை போலீசார், மும்பையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் தங்களுக்கு மும்பை அரசு ஒத்துழைப்பு அளிக்க வில்லை என்று பீகார் போலீசார் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சுஷாந்த்சிங்கின் தந்தை, தன் மகனின் மரணத்துக்கு நீதி கேட்டு, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரிடம் மனு கொடுத்தார். இதையடுத்து சுஷாந்த் சிங்கின் தந்தை விரும்பினால், மாநில அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கும் என்று நிதிஷ்குமார் கூறியிருந்தார்.
பரிந்துரை
இந்த நிலையில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பாட்னாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுஷாந்த் குடும்பத்தினர் ஒப்புதல் தெரிவித்ததன் பேரில், அவரது சாவு குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க, மாநில அரசு பரிந்துரைக்கிறது. சி.பி.ஐ. விசாரணைக்கான அனைத்து அடிப்படை சட்ட நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான பரிந்துரையை, மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பி விடுவோம்.
இவ்வாறு நிதிஷ்குமார் அவர் கூறினார்.
சுஷாந்த் சிங் மரணம் பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரைக்க முடியாது என்று சுஷாந்தின் காதலி ரியாவின் வழக்கறிஞர் சதிஷ் மனேஸ்ஷிண்டே கூறியுள்ளார். அவர் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
திசை திருப்ப முயற்சி
சுஷாந்த் சிங்கின் மரணம் பற்றி விசாரிக்க, பீகார் போலீசாருக்கு எந்த உரிமையும் இல்லை. அப்படிஇருக்கையில், சுஷாந்த் மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க, பீகார் அரசால் பரிந்துரைக்க முடியாது. இந்த வழக்கை, பீகார் போலீசார் விசாரிக்க முடியாது என்பதை தெரிந்து தான், சி.பி.ஐ.,விசாரணை என, பீகார் அரசு கூறி, வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.